மூளை வளர்ச்சிக்கு தண்ணீர் அவசியம்

Monday, May 31, 2010

லண்டன்: தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உடல்  நலத்தைக் காப்பதுடன், மூளையின் வளர்ச்சிக்கு குடிநீர் அவசியம் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.  லண்டனை சேர்ந்த கிங்ஸ் கல்லூரியின் ஆறிவியல் துறை நிபுணர்கள் குழு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்  குறித்து விரிவான ஆய்வு நடத்தியது. அதன் விவரம்: டீன் வயது இளைஞர்களின் மூளை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் மூளையின் வளர்ச்சிக்கும், சீரான இயக்கத்துக்கும்  குடிநீர் மிகவும் அவசியம் என்பது தெரியவந்துள்ளது.

போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் போனால் மூளை வள ர்ச்சி பாதிக்கப்படுவதுடன், சீரான இயக்கமும் தடைபடுவது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் 90 நிமிடங்களுக்கு  தொடர்ந்து வியர்வை வெளியேறினாலும் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்.  தண்ணீர் தாகத்துடன் இருப்பவர்களால் வேலை மற்றும் படிப்பில் உரிய கவனம் செலுத்த முடியாமல் போகிறது. எனி னும், தாகத்தை தணிக்கும் வகையில் தண்ணீர் குடித்தால் உடனடியாக மூளை இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என நிபு ணர்கள் தெரிவித்துள்ளனர்.

உடலின் எடைக்கு ஏற்ப தண்ணீர் தேவை மாறுபடுகிறது. மொத்த உடல் எடையில் 57 சதவீ தம் அதாவது 70 கிலோ எடை உள்ள ஒருவருக்கு 40 லிட்டர் தேவைப்படுகிறது. குடிநீர் பொதுவாக, உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதுதவிர, உடலில் கொழுப்பு சேர்வ தைத் தடுக்கவும், சீரான ஜீரணத்துக்கும், உறுப்புகளுக்கு மசகு பொருளாகவும், ஊட்டச் சத்துக்களை உடலின் பல  பாகங்களுக்கு எடுத்துச் செல்லவும், நோய்க் கிருமிகளை அழிக்கவும் தண்ணீர் பயன்படுகிறது என ஆய்வில் தெரியவந் துள்ளது.

Read more...

ஸ்ரீகாளஹஸ்தி கோவிலின் மேலும் 4 கோபுரங்களும் இடிந்து விழும் அபாயம்

ஸ்ரீகாளஹஸ்தி கோவிலின் மேலும் 4 கோபுரங்களும் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக தெரியவந்து உள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி நகரில் பிரசித்தி பெற்ற ஞானபிரசுனாம்பிகை உடனுறை ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. 500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோவிலின் ராஜகோபுரம், கடந்த 26-ந் தேதி அடியோடு இடிந்து விழுந்தது.

காளஹஸ்தி கோவிலுக்கு 4 நுழைவு கோபுரங்கள் உள்ளன. தற்போது இந்த 4 கோபுரங்களும் இடிந்து விழும் நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இடிந்து விழுந்த ராஜகோபுரத்திற்கு 50 அடி தூரத்தில் பிட்சால ராஜகோபுரம் உள்ளது.

இந்த கோபுரத்தை 11-ம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழன் கட்டியதாக தல வரலாறு கூறுகிறது. இந்த கோபுரத்தைச் சுற்றி ஆலமரச் செடிகள் மற்றும் முள் செடிகள் சேர்ந்து புதர்களாக வளர்ந்துள்ளது. இதனால் கோபுரத்தின் அடித்தளத்தில் விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது.

மேலும் காளஹஸ்தீஸ்வரர் மற்றும் ஞானபிரசுனாம்பிகா தாயார் கோவில் கருவறைகள் மீது கட்டப்பட்டுள்ள விமான கோபுரங்களும் சிதிலம் அடைந்துள்ளது. இந்த கோபுரங்களில் வடிவமைக்கப்பட்டுள்ள சிற்பங்களில் இருந்து மண் உதிர்ந்து வருகிறது. இதனால் சிற்பங்களின் கண்கள், மூக்கு, வாய், கைகள் சிதிலமடைந்து கோரமாக காட்சி அளிக்கின்றன.

இதேபோன்று 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பால ஞானாம்பிகா கோபுரத்தில் இருந்தும் மண் உதிர்கிறது. இந்தக் கோபுரமும் முழுவதும் சேதமடைவதற்குள் மராமத்து பணிகள் மேற்கொண்டு எஞ்சிய கோபுரங்களையாவது காக்க வேண்டும் என்று காளஹஸ்தி நகர மக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீகாளஹஸ்தி ராஜ கோபுரம் கடந்த 26-ந் தேதி இடிந்து விழுந்தது. இதனால் காளஹஸ்தி நகரமே களை இழந்து காணப்படுவதாக அந்தப் பகுதி பொது மக்கள் வருத்தம் தெரிவித்து உள்ளனர்.

இனி அந்த கோபுரத்தை தரிசிக்க முடியாது என்பதால், காளஹஸ்தி நகரின் சுற்றுப்புறங்களில் வசிப்பவர்கள் இடிந்த கோபுரத்தின் கற்களையும் மண்ணையும் எடுத்துச் செல்கின்றனர். அவற்றை தங்கள் வீடுகளில் பூஜை அறையில் வைத்து கும்பிட இருப்பதாக பெண்கள் தெரிவித்தனர்.

இடிந்து விழுந்துவிட்ட கோபுரத்தை பார்வையிட்ட மாநில அறநிலையத்துறை ஆணையர் ஜே.வி.எஸ். பிரசாத் ஓராண்டுக்குள் மீண்டும் அதே போன்ற ராஜ கோபுரத்தை கட்டி முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

கடந்த 25 ஆண்டுகளாகவே ஸ்ரீகாளஹஸ்தி கோவிலின் ராஜகோபுரம் சிதிலமடைந்து விரிசல் ஏற்பட்டு இருந்துள்ளது. அதனை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்காமல் உதாசீனப்படுத்தியதால்தான், இந்த நிலைமை ஏற்பட்டது. இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நீதி விசாரணைக்கு உத்தரவிட்டு, இது போன்ற சம்பவங்கள் மேலும் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்று பிரஜா ராஜ்ஜியம் கட்சித் தலைவர் நடிகர் சிரஞ்சீவி தெரிவித்து உள்ளார்.

Read more...

6 கோடி நஷ்டஈடு தர விஜய் சம்மதம்..!

'சுறா' படம் தோல்வியடைந்ததால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட நடிகர் விஜய் ரூ 6 கோடியை நஷ்ட ஈடாக திரையரங்க உரிமையாளர்களுக்கு தர சம்மதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்யின் 'சுறா' படம் தோல்வி அடைந்ததாகவும் அதற்கு இழப்பீடு வேண்டும் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.

'சுறா' படம் மூலம் திரையரங்க உரிமையாளர்களுக்கு ரூ.10 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும், எனவே இந்த படத்துக்கு முதலீடு செய்த தொகையில் ரூ.6 கோடியை திருப்பித் தர வேண்டும் என்றும் இச்சங்கத்தின் பொதுச்செயலாளர் 'ரோகிணி' பன்னீர் செல்வம், செயற்குழு உறுப்பினர் திருச்சி ஸ்ரீதர் ஆகியோர் தெரிவித்தனர். ஆனால் விஜய் தரப்பில் எல்லாமே வெற்றி படங்கள் என்று கூறி வருகிறார்கள்.

ஏற்கனவே ரஜினி, விஜய டி.ராஜேந்தர் ஆகியோர் படங்கள் தோல்வியடைந்த போது திரையரங்க உரிமையாளர்களுக்கு 35 சதவீதம் நஷ்ட ஈடு கொடுத்தார்கள். அது போல் விஜய்யும் நஷ்டஈடு தர வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் பிடிவாதமாக உள்ளனர்.

இழப்பீடு தராவிட்டால் இன்னும் 3 வாரங்களில் செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்வோம் என்றும் அறிவித்து உள்ளனர்.

விஜய் தற்போது 'காவல்காரன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.அடுத்து 'வேலாயுதம்' என்ற படத்திலும், இந்தியில் வெற்றிகரமாக ஓடிய '3 இடியட்ஸ்' படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடிக்க உள்ளார்.

நஷ்ட ஈடு வழங்காவிட்டில் இப்படங்களுக்கு எதிரான முடிவை செயற்குழுவில் எடுப்போம் என்று திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில் திரையரங்க உரிமையாளர்கள் தரப்பிலும் விஜய் தரப்பிலும் சமரச பேச்சுவார்த்தைகள் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடைபெற்று வருவதாகவும் செயற்குழு கூட்டத்துக்கு முன் சுமூகமான முடிவு ஏற்படும் என்று நம்புவதாகவும், தியேட்டர் அதிபர்கள் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

6 கோடிவரை நஷ்ட ஈடு தர விஜய் சம்மதித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Read more...

பேய் நடமாட்டம்.

Thursday, May 27, 2010

"என்ன தான் செய்துவிடும்?
உயிரும் உடலும் சேர்ந்த மனிதத்தை!…
நீ நம்பும் ஆவி".

காலை மணி 7.00. எப்போதும் கூட்டம் நிறைந்து நிற்கும் தளவாய்புரம் காவல் நிலையத்தில் இன்று பிரச்சனைகளை சுமந்து நிற்கும் மக்கள் கூட்டத்தைக் காணமுடியவில்லை. மாறாக காவலர்கள் வெளியில் நின்று ஏதோ பரபரப்பாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

தூரத்தில் பட்…பட்…. என்ற புல்லட் பைக்கின் ஓசை கேட்டு பரபரத்து அவரவர் இடத்திற்கு சென்று நிலைகொண்டார்கள் காவலர்கள்.

மிடுக்காக பைக்கில் இருந்து இறங்கி தன் சிங்கப் பார்வையால் கம்பீரமாக சுற்று வட்டாரத்தை நோட்டம் விட்டபடி தன் விறுவிறு நடையுடன் காவல் நிலையப்படி ஏறிய படியே "இராஜவேல் இங்க வாங்க", என்று குரல் கொடுத்த எஸ்.ஐ ஆதித்யா முப்பத்து மூன்று வயதைக் கடந்து சில வாரங்கள் தான் இருக்கும். ஐந்தே முக்கால் அடி உயரம். பொதுப்படையான நிறம். துறு துறு கண்கள். ஒட்ட வெட்டிய தலைமுடியில் தான் போலீஸ் என்பதை சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தார்.

வெந்நீரைக் காலில் ஊற்றிக்கொண்ட அவசரத்தில் ஓட்டமும் நடையுமாக எஸ்.ஐ முன் வந்து நின்றார் இராஜவேல். சுமார் நாற்பதைக்கடக்கும் வயதுடன் இன்னும் தொப்பை சரியாத வயிற்றுடன் கம்பீரமாக இருந்தார். தன் மேலதிகாரி நேர்மையானவர் என்பதால் அவர் மீது அபாரமான மரியாதை வைத்திருப்பவர். அவரது ஓட்டமும் நடையுமான வேகத்திற்குக் காரணம் மேலதிகாரி மீதுள்ள பயம் இல்லை. மாறாக அவர் மீது கொண்டிருந்த மரியாதையே காரணம்.

"அய்யா, சொல்லுங்கய்யா, இராஜவேல் பவ்வியமாக வார்த்தைகளை உதிர்த்தார்.

"என்ன இராஜவேலு ஏதாவது விஷேசமா…வெளிய ஒரு ஆளக்கூட காணல்ல… நம்ம ஆட்கள்கிட்டயும் ஏதோ வித்தியாசமா தெரியுது.

இராஜவேலுவின் முகத்தைப் பார்த்துக்கொண்டே கேட்டார் எஸ்.ஐ. அவருக்குத் தெரியும் இராஜவேலுவிடம் கேட்டால் தான் ஒளிவு மறைவற்ற உண்மை கிடைக்கும் என்று. எதையும் கூட்டிக் குறைத்துக் கூறமாட்டார். ஆனால் இடம் பொருள் பாரத்து பக்குவமாக உள்ளதை உள்ளபடி பேசுவார். எல்லோரின் நலம் விரும்பி. காசுக்காக எதையும் செய்ய மாட்டார். காரியம் செய்த பின் யாரும் விரும்பி கொடுக்கும் பணத்தையும் வேண்டாம் என்று மறுக்க மாட்டார். யாரிடமும் வாய் திறந்து பணம் கேட்கவும் மாட்டார். எதார்த்த வாதி. அதனாலேயே எஸ்.ஐ-க்கும் அவரை நிரம்பவே பிடிக்கும்.

அய்யா, நேத்து ராத்திரி நம்ம மலை பிள்ளையார் கோவில் அடிவாரத்துல இருக்குற சுடுகாட்டு பக்கமா ரோட்டுல போய்ட்டு இருந்த மேலத்தெரு பெரிய சாமியை பேய் அடிச்சு இறந்துபோனான். காலைல தான் ரோட்டுப்பக்கமா போன ஆட்கள் பார்த்துட்டு வந்து தகவல் சொன்னாங்க. நம்ம பெரிய ஏட்டு இராமச்சந்திரனும் இப்ப அங்கதான் போயிருக்காரு. வீ.ஏ.வும் பார்த்துட்டு வந்து கம்ப்ளைண்ட் தர்ரதா சொல்லிட்டுப் போயிருக்காரு. அதான் ஊர் ஜனங்கள்லாம் அங்க வேடிக்கை பார்க்கப் போயிட்டாங்க. அதப்பத்திதான் நம்ம ஆளுங்களும் பேசிட்டு இருந்தாங்க.

"என்ன இராஜவேலு தமாசு பண்ணுரீங்க…பேயடிச்சு இறந்தான் கீயடிச்சு இறந்தான்னுட்டு…வேடிக்கையா இல்ல இது.

"அய்யா, அப்படில்லாம் சொல்லாதீங்க பேய் பிசாசு எல்லாம் உண்மைதான். நானே அந்த இடத்த கடந்து போகும் போது ஒருமுறை பேயப் பார்த்து இருக்கேன். ஆறு மாதச்த்துக்கு முன்ன நானும் ஏட்டு கலிய பெருமாளும் இராத்திரி ரோந்து போயிட்டு ராத்திரி 12.00 மணிக்கு அந்த இடத்துல வந்துட்டு இருக்கும் போது திடீர்னு எங்க முன்ன ஒரு பனை உயரத்துக்கு பேய் ஒண்ணு புகைமூட்டம் மாதிரி வந்து நின்னுது…"

சொல்லும் போதே மூச்சிரைத்த இராஜவேல் மீண்டும் தொடர்ந்தார்.
"நல்ல வேளையா அந்த நேரம் பார்த்து லாரி ஒண்ணு வந்தது. அத பார்த்துட்டு அந்த பேய் மறைச்சி போயிட்டுது இல்லது அண்ணைக்கே எங்க கதியும் மேலத்தெரு பெரிய சாமி கதிதான். ஆனாலும் கலிய பெருமாள் மூணு மாசம் படுத்தப்படுக்கை ஆகிட்டார். இப்ப கொஞ்ச நாளாத்தான் ஆள் நல்லா இருக்கார்." பரவசத்தோடு சொல்லி முடித்தார் இராஜவேல்.

எஸ்.ஐ ஆதித்தியாவின் இளம் இரத்தம் இராஜவேலு சொன்னவற்றை நம்ப மறுத்தாலும் அவர் சொன்னவற்றை கவனமாக கேட்டு தலையாட்டி வைத்தார்.

சரி அடுத்த காரியத்த பாருங்க இராஜவேலு தலைக்கு மேல வேலையிருக்கு. சொல்லிக் கொண்டே ஆதித்யா தன்முன் மேஜையில் குவிந்திருந்த கேஸ் கட்டுக்களை எடுத்து வாசிக்கலானார்.

இரண்டுவாரம் கழித்து ஒரு வெள்ளிக்கிழமை. எஸ்.ஐ ஆதித்யாவிற்கு இரவு ரோந்துப் பணி ஒதுக்கியிருந்தார்கள். ஆதித்யா காவல் நிலையத்தில் பேசிக்கொண்ட பேய்க்கதைகள் அத்தனையும் மறந்து விட்டிருந்தார். அன்று இரவு ரோந்திற்கு அவரோடு இராஜவேலுவுக்கும் டூட்டி போட்டு இருந்தார்கள்.

இருவரும் சப்-டிவிசன் எல்லைக்குள் ரோந்து முடித்துவிட்டு நள்ளிரவு சுமார் 2.00 மணிக்கு காவல் நிலையத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

சற்று தூரத்தில் மலைப் பிள்ளையார் கோவில் மெர்க்குரி விளக்கை பார்த்த போதே இராஜவேலுவிற்கு வயிற்றை ஏதோ பிசைவது போல உணர ஆரம்பித்தார். கூடவே பிண வாடை வேறு. அனேகமாக அந்த சுடுகாட்டில் தான் பிணம் எரிந்து கொண்டிருக்க வேண்டும். வேறு வழியாக காவல் நிலையத்திற்கு போனால் நன்றாக இருக்கும் என்று இராஜவேலுவிற்கு தோன்றியது. ஆனால் அதை எப்படி எஸ்.ஐ-யிடம் சொல்வதென்று மனதிற்குள் தயங்கிக்கொண்டிருக்கும் போதே எஸ்.ஐ-யின் புல்லட் கோவில் அடிவாரத்தில் இருக்கும் சுடுகாட்டிற்கு சமீபமாக வந்து விட்டது.

"இராஜவேலு பொணம் ஏதும் எரியுதோ?!…", எஸ்.ஐ-ஏ கேட்டார்.

"அய்யா, ஆமங்கையா…பொணம் எரியுற வாடைதான் இது… அதன்பின் நீண்ட மௌனம் இருவரும் ஏதும் பேசிக்கொள்ளவில்லை.

கீரீச்…. எஸ்.ஐ ஆதித்தியா புல்லட்டை அசுரத்தனமாதக பிரேக்போட்டு நிறுத்தினார். இராஜவேலுவும் ஒரு நிமிடம் பதட்டத்தில் ஆடிப்போனவர் சுதாகரிப்பதற்குள் "இராஜவேலு முன்னப்பாருங்க… பதட்டமாக ஆனால் மிகச் சன்னமாக வார்த்தைகள் வேளிப்பட்டது எஸ்.ஐ ஆதித்தியாவிடம்.

முன்பக்கம் எட்டிப்பார்த்த இராஜவேலு உரைந்தே போனார். அவர் சுமார் ஏட்டு மாதங்களுக்கு முன் இதே இடத்தில்வைத்து பார்த்த அதே உருவம். ஆஜானுபாகுவாக ஒரு பனை உயத்தில் கருகருவென்று வெண்புகை சூழ…. அய்யோ இன்று தொலைந்தோம் யாரும் எஸ்.ஐ ஆதித்யாவையும் தன்னையும் காப்பாற்ற முடியாது. இன்றோடு தொலைந்தோம். அய்யய்யோ பிள்ளை குட்டிகளுக்கு கூட இது வரை ஏதும் சேர்த்து வைக்கவில்லை. நாம இல்லண்ணா எப்படி கஸ்டப்படப்போறாங்களோ…ஏதேதோ எண்ண ஓட்டம் மனதில் ஓட கண்கள் மங்கத்தொடங்கியது…

எஸ்.ஐ ஆதித்யாவிற்கும் மனதிற்குள் லேசான நெருடல். இதே இது மனிதனாக இருந்து எப்பேர்ப்பட்டவனாக இருந்தாலும் எத்தனை பேராக இருந்தாலும் சமாளித்துக்கொள்ளலாம். உண்மையிலேயே இது பேயா இருந்தா என்ன செய்யுறது. இடுப்பில் அமைதியாய் நான் எப்போதும் உனக்குத் துணை என்பதுபோல் கம்பீரமாக காத்துக்கொண்டிருந்த பிஸ்டலை தொட்டுப் பார்த்துக்கொண்டார்.

அந்த நெடிய உருவம் மெல்ல மெல்ல நகர்ந்து தங்கள் பக்கம் வருவதைப்பார்த்த எஸ்.ஐ ஆதித்தியாவிற்குள்ளும் பய இருள் மெல்ல படர ஆரம்பித்தது. தன் இஸ்ட தெய்வம் முருகனை மனதிற்குள் வணங்கிக் கொண்டார்.

அவர் அப்பா அடிக்கடி சொல்லும் "பயமில்லாதவனாக நடிப்பது கூட பயத்தை வெல்லும் உபாயம் தான்" என்ற வார்த்தைகளை மனதில் அசைபோட்டுக் கொண்டு மனதை உண்மையிலேயே தைரியப்படுத்திக் கொண்டார். பிறந்த மனிதன் இறப்பது உறுதி என்ற தெளிவு சிறு வயதிலேயே இருந்ததால் வருவது வரட்டும் அந்த உருவத்தை எதிர்கொண்டு ஜெயிக்கலாம் என்று மனதில் துணிந்தார்.

அந்த உருவத்தை கூர்மையாக உற்று நோக்க ஆரம்பித்தார்.

அந்த உருவம் மேலும் மேலும் இருவரையும் நெருங்கியது. சில நேரம் இடது பக்கமும் வலது பக்கமும் சென்று வருவது போல் இருந்தது. பைக்கை திருப்பிக்கொண்டு வந்த வழியோ விரைவாக திரும்பி விடலாமா என்று ஆசையையும் ஒருவேளை அந்த உருவம் பைக்கைவிட வேகமாக நம்மைப்பின் தொடர்ந்தால் என்ன செய்வது என்ற எண்ணம் தடுத்து நிறுத்தியது.

இனம் புரியாத உணர்வோடு செய்வதறியாத நிலையில் உடலெங்கும் வியர்த்து வியர்வையாறு கொட்டியது. பயத்தில் மூர்ச்சையான இராஜவேல் மெல்ல கண்விழித்தவர் அந்த உருவத்தை மிக அருகில் பார்க்க நேர்ந்ததால் மீண்டும் சின்ன முனகலோடு மூர்ச்சையாகி ஆதித்யாவின் முதுகில் சாய்ந்தார்.

ஆதித்யா இடுப்பிலிருந்து பிஸ்டலை உருவி காக் செய்து துப்பாக்கியை தயார் நிலையில் வைத்துக்கொண்டார். வருவது வரட்டும் என்ற துணிவோடு அந்த உருவத்தை அங்குலம் அங்குலமாக ஆராய ஆரம்பித்தார். சுமார் முப்பது அடி உயர கரிய ஒளி ஊடுருவம் தன்மையுள்ள உடல் பருத்து பனைபோல காட்சி தந்தது. தலை என்று எதுவும் தனியாக தெரிய வில்லை. உடலின் உச்சியிலிருந்து சுமார் ஐந்தடி கீழே அகல விரித்த பருத்த கைகள். வாவா என்று அவரை அழைப்பது போலவே அவருக்கு தோன்றியது. கைகழுக்கு கீழே கால்கள் இரண்டாக இல்லாமல் ஒரே தூண்போல இருந்தது. கால்களும் தரையில் தொட்டதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.

அந்த உருவம் மேலும் மேலும் அருகில் நெருங்கிக் கொண்டிருந்தது. ஆதித்யாவின் பயம் முழுவதும் வடிந்து போய் இப்போது வருவது வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்ற தைரியம் மேலோங்கியிருந்தது. தன் தைரியத்தைப் பற்றி தனக்குள்ளேயே உருவகப்படுத்திக் கொண்டார் ஆதித்யா "அணையப்போகும் விளக்கின் கடைசி பிரகாசமாக இருக்குமோ" என்று.

முதுகில் சாய்ந்திருந்த இராஜவேல் இடது புறமாக சரிவது போல் இருந்தது. அந்த இக்கட்டான நிலையிலும் அவர் கீழை விழுந்து விடக்கூடாது என்பதற்காக பைக்கில் இருந்தபடியே பின் பக்கம் திரும்பி இராஜவேலுவை தூக்கி நிமிர்த்து வைத்து விட்டு திரும்பியவருக்கு தனக்கு பின்னால் இருந்த மரத்தில் தெரிந்த காட்சி மனதில் புது தெம்பை ஊட்ட உற்சாகமாக முன்பக்கம் திரும்பினார்.

அந்த உற்சாக மிகுதியோடு பிஸ்டலை இடுப்பில் செருகிக்கொண்டு அந்த உருவத்தை மீண்டும் கவனமாக உற்றுநோக்கிக் கொண்டே நிம்மதிப் பெருமூச்சு விட்டார். இராஜவேலுவை எழுப்ப நினைத்தவர் அவரை எழுப்பாமலேயே மனதிற்குள் நினைத்துக்கொண்டார் ஒருவேளை எழுந்தால் மீண்டும் மூர்ச்சையாக கூடும் என்று அதனால் தன் இருப்பிலிருந்த பெல்டை கழட்டி அதை தளர்த்தி இராஜவேலுவையும் தன்னையும் ஒரே பெல்டினால் இராஜவேல் கீழே விழாதவாறு பிணைத்துக் கொண்டு அந்த உருவத்தைப்பார்த்து புன்னகைத்துக்கொண்டு புல்லட்டை காவல் நிலையம் நோக்கி நிதானமாக செலுத்தினார்.

மறுநாள் காலை 7.00 மணி ரோல் கால். எஸ்.ஐ ஆதித்யா கம்பீரமாக தன் இருக்கையில் அமர்ந்திருக்க இராஜவேலுவும் மற்ற காவலர்களும் அவரை சுற்றி நின்று கொண்டு இருந்தனர் அன்றைய தங்களது டூட்டியைத் தெரிந்து கொள்வதற்காக.

இராஜவேலு மனதில் அன்றைய டூட்டியைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலைவிட எஸ்.ஐ-யும் தானும் இன்று எப்படி உயிரோடு இருக்கின்றோம் என்பதை தெரிந்து கொள்ளும் ஆவலே அதிகமாக இருந்தது. நேற்றைய சம்பவத்தை இராஜவேலு ஏற்கனவே மற்ற காவலர்களிடமும் சொல்லி இருந்ததால் அவர்களும் ஆவலாகவே இருந்தனர்.

இராஜவேலு தன் ஆவலை அடக்க முடியாமல் கேட்டே விட்டார். "அய்யா, அந்த பேய்கிட்ட இருந்து நீங்களும் தப்பிச்சி என்னையும் எப்படிங்கய்யா காப்பாத்திகிட்டு வந்தீங்க….".

ஆதித்யா தனக்குள் நமட்டுச்சிரிப்பு சிரித்துக்கொண்டு சுற்றி நின்ற காவலர்களின் முகத்தை ஒருமுறை நோட்டம் விட்டார்.

"அது ஒண்ணும் பேய் இல்லைங்க…நம்மோட பிரமைபும் பயத்தின் வெளிப்பாடும் கலந்து தான் அது நமக்கு பேயா தெரிச்சிருக்கு…எனக்கும் தான்…மற்றப்படி அங்க பேயும் இல்ல பிசாசும் இல்ல…"

"அய்யா, நீங்களும் நானும் தான் கண்கூடாக பார்த்தோமே அந்த பேயை. அப்புறமா எப்படி அது பேய் இல்லைண்ணு சொல்லுரீங்க. அப்ப நான் பார்த்தது பொய்யா…" , என்றார் இராஜவேலு.

"இராஜவேலு நாம ஒரு உருவத்தைப் பார்த்தது உண்மை தான். ஆனா அந்த உருவம் பேயா இருக்க வேண்டிய அவசியம் இல்லையே… நிறைய பேரு இப்படித்தான் ஏதாவது உருவத்தைப்பார்த்து பேய்யிண்ணு நினைச்சி பயந்துகிட்டு மற்றவங்களையும் பேயிருக்குண்ணு பயங்காட்டி பயமுறுத்தி வச்சிடராங்க. உண்மையில உலகத்துல பேயும் இல்ல, பிசாசும் இல்ல எல்லாம் நம் பயத்தின் பிரதிபலிப்பும் பிரம்மையும்தான்".

"அய்யா, அப்ப உங்க வார்த்தைப்படியே நாம நேற்று பார்த்தது பேயில்லண்ணு ஒத்துக்கிறேன். அப்ப நாம பார்த்த அந்த பனை மரத்தளவு உயரமான உருவம் யாரு அல்லது என்னது".
"அப்படி கேளுங்க சொல்ரேன். உங்க நிழல நீங்க பார்த்து இருக்கிங்களா?…. பார்த்து இருப்பீங்க. காலைல பார்த்தா எப்படி இருக்கும் உங்க நிழல்?. நீட்டமா நெடு நெடுண்ணு இருக்கும். மதியம் பார்த்தா எப்படி இருக்கும்? குள்ளமா கட்டையா இருக்கும்…"

இராஜவேலு எஸ்.ஐ பேச்சை இடைமரித்து, "அய்யா, நான் பேயைப்பற்றி பேசிகிட்டு இருக்கேன்…நீங்க என்னண்ணா என் நிழலைப்பத்தி பாடம் நடத்திட்டு இருக்கீங்க… அய்யா அம்மாவாசைக்கும் அப்துல் காதருக்கும் முடிச்சு போடாதீங்க", என்றார்.

எஸ்.ஐ சுற்றி நின்ற காவலர்களை ஒருமுறை நோட்டம் விட்டார். எல்லோரின் மனதிலும் இராஜவேலுவின் மனநிலையே ஓடிக்கொண்டிருந்ததை அவர் போலீஸ் பயிற்சின் போது படித்த மனோதத்துத்தின் பயனாய் சிரிதேனும் கணிக்க முடிந்தது.

"இராஜவேலு, அம்மாவாசைக்கும் அப்துல் காதருக்கும் தொடர்பு இருக்கா இல்லையாண்ணு எனக்கு தெரியாது. ஆனா நம்மள எல்லாம் பயமுறுத்திகிட்டு இருக்கிற இந்த பேய் சமாச்சாரத்திற்கும் இந்த நிழலுக்கும் ரெம்பவே தொடர்பு இருக்கு".

ஒரு நிமிடம் பேச்சை நிறுத்திவிட்டு தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும், "எனக்கு கிடைத்த அனுபவத்தை வச்சு சொல்லணும்னா எல்லாருமே நிழலைப்பார்த்து தான் பேய்ண்ணு தப்பா நினைச்சிக்கிட்டு பயந்து உயிரை விடராங்க பொழைச்சவங்க மத்தவங்கள பயத்துல சாகடிக்கிறாங்க…".

"நான் கூட நேற்று இராத்திரி அந்த உருவத்த பேய்தானோண்ணு நினைக்க ஆரம்பிச்சிட்டேன். ஆனால் வண்டியில மயக்கமா இருந்த இராஜவேலுவ சரியா நிமிர்த்தி வைக்க திரும்பினப்பத்தான் உண்மைய புரிஞ்சு கிட்டேன். நானும் இராஜவேலுவும் அதுவரை பார்த்த உருவம் பேயில்ல நிழல்னு…" , ஆதித்யா சற்று நிறுத்தினார் தன் பேச்சை.

அதற்குள் இராஜவேலுவும் மற்ற காவலர்களும், "அய்யா, அது எப்படிங்கய்யா நிழலா இருக்க முடியும்?", என்றனர்.

"அது ஒண்ணும் பெரிய சமாச்சாரம் இல்ல. அந்த சுடுகாட்டுக்கும் வடக்கு பக்கமா ரோட்டுல இருக்குற மின்சார கம்பத்த எல்லாரும் பார்த்து இருப்பீங்க…".

எல்லோரும் ஆதித்யா சொல்வதை ஆமோதிப்பது போல் கோரசாக ஆமாம் போட்டனர்.

"ரோட்டுல அந்த மின்கம்பிக்கும் வடக்குப் பக்கம் தாழ்வான பகுதி. அங்க இருந்து காரோ, லாரியோ அல்லது பைக்கோ வந்ததுண்ணா அது நமக்கு தூரத்துல வரும் போது தெரியாது. ஆனால் அந்த வாகனங்களின் ஹெட்லைட்ல இருந்து வர்ர ஒளி அந்த மின்கம்பத்துல படுறதுனால மின்கம்பத்தின் பிம்பம் பெரிசா தெற்குப் புறமாக உள்ள மரத்தில் அல்லது வேறு இடத்தில தெரியும். மற்றபடி அது வித்தியாசமா சாதாரண நாட்கள்ல தெரியிறது இல்ல. ஆனா அந்த சுடுகாட்டுல பிணம் எரியுற நாட்கள்ல மட்டும் பிணம் எரிகிறபோது வரும் புகைக்கு நடுவே அந்த நிழல் தெரியும் போது ஆஜானு பாகுவான உருவமா தெரியுது. வாகனம் நெருங்கி வரவர உருவமும் அசைந்து அசைந்து முன்னால வந்த மாதிரி தெரியுது. வாகனம் மேடான பகுதிக்கு வரும் போது உருவம் மறைந்தும் போகுது. அதப்பாக்கிறவங்களும் அது பேய்தான்னு தப்பா புரிஞ்சிக்கிறாங்க. அப்படித்தான் நம்ம இராஜவேலுவும் முதல் முறையா அந்த உருவத்த பார்த்த போது அது பேயிண்ணு நினைச்சி பயந்தது. மேலும் பக்கத்துல அந்த நேரம் லாரி வந்ததால அந்த உருவம் மறைந்து போனதாக சொன்னது. இப்பப் புரியுதா அந்த இடத்தில பேய் எப்படி வந்ததுண்ணு?…"

எஸ்.ஐ. ஆதியின் அறிவுப்பூர்வமான விளக்கம் பேயைப்பற்றிய அவர்களது தவறான கண்ணோட்டத்திற்கு விடை கூறுவது போல் இருந்தது.

இராஜவேலுவிடம் இருந்து ஒரு நிம்மதிப் பெருமூச்சு வெளிப்பட்டது. தான் பார்த்தது பேயில்லையென்று!….

Read more...

மூன்றாவது மனிதர்களின் உலகம்

Saturday, May 15, 2010

முதலாவது மனிதர் உள்ளே வந்தார்.
வாசலில் மாட்டியிருந்த அறிவித்தல் பலகையை அவர் படிக்கவில்லை.அவர்உணர்ச்சிவசப்பட்டிருக்கலாம்.பிரச்சினைகளில் மனம்மூழ்கிப்போய்,கவனிக்காதுவிட்டிருக்கலாம்.வாசிக்கத்தெரியாதவராக இருக்கலாம்
'' ஐயா இந்த நேரம் நீங்கள் நோயாளிகளைப்பார்க்க இயலாது. மத்தியானம் 12 க்குப்பிறகுதான் பார்க்கலாம். எழுதிப்போட்டிருக்கிறோம், பார்க்கவில்லையா'' குரலில் கனிவு சொட்டியது
''சொறி நான் கவனிக்கவில்லை''
''போய்ப் பிறகு வாங்கோ''
''  சரி '' அவர் போய்விட்டார்.
    அவர் போய்ச் சிறிது நேரத்தில் அடுத்தவர் வந்தார்.
''இது பார்க்கிற நேரமில்லை. எழுதிப்போட்டிருக்கிறது.''

''நான்''.. என்று வந்தவர் இழுக்க

''போய்ப்பிறகு வாங்கோ''
இந்தமுறை பேச்சில் கொஞ்சம்  இறுக்கம் வந்திருந்தது.
 இரண்டாவது மனிதர் வெளியேறிவிட்டார்.

 சிறிது நேரந்தான். மூன்றாவது மனிதர் உள்ளே வந்தார்.

'' ஏனையா அறிவிருக்கா? வெளியில் எழுதிப்போட்டிருக்கிறதை படியுங்கோவன் வந்து வந்து கழுத்தறுங்கிறீர்கள்'' வெடித்தார் அதிகாரி.
வந்தவர் திகைத்துப்போய் வெளியேறினார்.
அவர் மூன்றாவது மனிதர்.
மூன்றாவது மனிதர்கள் எப்போதும் இப்படித்துன்பப்படுகிறார்கள்.

சாதாரணமாய் மூன்றாவது மனிதர் எனும்போது வேற்று ஆள் என்று பொருள் படும்.அதாவது நான்,நீ, அவனில் வருகிற அவன்.எங்களுக்குள் ஏன் ஒரு மூன்றாமாளை இழுப்பான் என்பார்களே அதுவல்ல இந்த மூன்றாவது மனிதர்.மூன்றாவதாய் வருபவர்.
ஆனால் முதலாவதாய் இருக்கவேண்டியவர்கள் மூன்றாவதாய் கருதப்படும் துரதிர்ஷ்டம் எங்கள் நாடுகளில் இருக்கிறது.
மக்களுக்கு பதிலாக அரசியல்வாதிகள் முதலாவதாக கருதப்படுகிறார்கள்.
மாணவர்களிற்காக உருவாக்கப்பட்ட பாடசாலைகளில் நிர்வாகம் முதலாவதாக இருக்கிறது.நோயாளிகளுக்காக உருவாக்கப்பட்ட வைத்தியசாலைகளில் அவர்கள் மூன்றாம் நபராக மதிக்கப்படுகிறார்கள்.அது இன்னொரு பார்வை.( நான் அரசியல்வாதி, நீ போலிஸ், அதற்குள் இந்த மூன்றாம் ஆள்... அதுதான் பொதுஜனங்கள் எதற்கு..இப்படி)

இங்கே மேற்படி அதிகாரி முதலாவது இரண்டாவது நபர்களை பொறுமையாகக்கையாளுகிறார்.முதலாவது ஆளின் பக்கமிருந்து கூட யோசித்துப்பார்க்கவும் செய்கிறார்.
இரண்டாவது ஆளில் சலித்துப்போய்விடுகிறார்.
மூன்றாவது மனிதர் மீது கோபங்கொண்டு அவமானப்படுத்தி விடுகிறார்.
அதிகாரியின் பார்வையில் ஒரு தவறு மூன்று முறை நிகழ்கிறது. அது கோபத்தை ஏற்படுத்துகிறது.தவறைப்பார்த்து  வெளிப்படுகிற அவருடைய ஆத்திரம் , ஒரே மனிதர் ஒரு தவறை மீண்டும் செய்கிறபோது ஏற்படுகிற எரிச்சல் போல இங்கு வெளிப்படுகிறது. ஆனால், தவறைச்செய்பவர் புது மனிதர் என்பதை அவர் பார்க்க மறந்து விடுகிறார்.(sensitization) அல்லது எல்லாரும் இப்படித்தான் என்று பொதுமைப்படுத்தி விடுவார்.
அதனால்தான் இப்படி பொதுச்சேவையில் இருப்பவர்கள்
''இந்தச்சனங்களே இப்படித்தான்.'' என்று சொல்லி கடுமையாக நடந்து கொள்வார்கள்.இது பொதுமைப்படுத்தல்(generalization) எனப்படுகிறது.
   அதாவது அந்த எழுதிவைத்த அறிவித்தலைப்பார்த்து 50 பேர் உள்ளே வராமல் இருந்திருப்பார்கள்.ஒரு மூன்று பேர் மீறி உள்ளே வந்திருப்பார்கள்.
அதிகாரி '' கொஞ்சங்கூட அறிவில்லாத சனங்கள்'' என்று எல்லோரையும் இழுத்துவிட்டுவிடுவார்.
மறுபக்கத்தில் மூன்றாவது மனிதருக்கு தனக்கு முன்னால் இருவர் போய் வந்தவிடயம் தெரியாது.
" என்ன இந்தாள் இப்படி நாய் மாதிரி பாயுறான். இவங்களே இப்படித்தான், காசைக்காட்டினால் பல்லை இளிப்பாங்கள்''அப்படி என்று யோசிக்கக்கூடும். தாழ்வுமனப்பான்மையுள்ளவராயின் '' "உலகத்திலேயெ என்னைப்பார்த்து ஒருவருமே மதிப்பதில்லை''
என்று மனமுடைந்து போய்விடுவார்.
மேலும் இந்த மூன்றாவது மனிதர்கள் அந்த நிகழ்வை தங்கள் சாதி, இன சமய அடிப்படையில் அர்த்தப்படுத்திக்கொள்ளவும் கூடும்.
இவை பொது அபிப்பராயமாக மாறி சனங்கள் என்றால் இப்படி, அரசு அலுவலர் என்றால் அப்படி என்று ஒரு பொதுக்கருத்தாகவே மாறிவிடுகிறது.(ஊழல் வேறு)

  .
இப்படி பற்றாக்குறை,நெருக்கடி நிறைந்த மருத்துவமனைகள், அலுவலகங்கள்(அரசு),பேருந்துகள்,பிரயாணங்கள் இப்படி எல்லாவிடங்களிலும் இந்த  சக மனிதர்களின் மீதான பாய்ச்சல் நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது.
.இங்கெல்லாம் சேவையை வழங்குபவர்கள் சிலராகவும் பெறுபவர்கள், பெறுவதற்காக காத்திருப்பவர்கள் அனேகமாகவும் இருக்கிறார்கள். இந்தப்பற்றாக்குறையின் விளைவு மேற்படி மூன்றாவது மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடுவதுதான்.
அதாவது எல்லாருடைய தவறுகளின் விளைவும் ,காய்ச்சிய வார்த்தை ஈயங்களாக ஊற்றப்படுகிறது. அவமானங்களும், துன்பங்களும்வெஞ்சினங்களாக ஊற்றெடுக்கின்றன.பற்றாக்குறை நிறைந்த உலகம் பாதிக்கப்படுகிற மூன்றாவது மனிதர்களின் உலகமாகி விடுகிறது.
 
 
அதாவது இவர்கள் இப்படித்தான் இவர்களை இப்படித்தான் நடாத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்ட உலகம்.
 சாட்டைகளாக நாவைச்சுழற்றி வார்த்தைகளை  வீசிக்கொண்டிருக்கிற மனிதர்களின் உலகம்.

இதற்கு என்ன தீர்வு என்று கேட்டால் பெறுபவரும் கொடுப்பவரும் எதிரிலிருப்பவரை மனிதராக பார்க்கவேண்டும்.
ஆனால் சேவை பெறுவதற்காக நூற்றுக்கணக்கானோர் கியூவில் நிற்கும் ஒரு சந்தர்ப்பத்தில் ஒருவர் அப்படிச்செய்வதற்கான  சாத்தியம் குறைந்து  பணி இயந்திரத்தனமாக மாறிவிடும் என்பது கண்கூடு.
    பதிலாக கியூவில் காத்துக்கொண்டிருப்பவர் தன்முறைக்கு ஏதாவது குளிர்மையாகப்பேசி வேலைப்பளுவிலிருப்பவரை குளிர்விக்கலாம்.வார்த்தைகள் பொருத்தமாக விழவேண்டும்.
 
இப்படித்தான் ஒருவர் குளிரப்பேசினார்.
" உங்களை மாதிரி திறமையாக வேலை செய்பவரை பார்க்கவில்லை.இவ்வளவு பேரையும் சமாளிக்கிறதென்றால் சும்மாவா''
இதுவரை இறுக்கமாக வேலை செய்தவர் கொஞ்சம் இளகிப்போனார்.
'' இது எங்கட கடமை என்ன செய்யிறது இன்னும் சாப்பிடக்கூட இல்லை''
'' கடவுளே இந்த சனத்துக்கெங்கே விளங்கப்போகுது.ஒரு கூல் ட்ரிங் வாங்கி வந்து தரட்டா''
''வேண்டாம்  உங்களைக்கொண்டு வாங்கிறது சரியில்லை"
''என்ன கதைக்கிறீங்கள்'' இவ்வளவு பேரையும் சமாளிக்கிறீங்கள் ஐந்து பேர் செய்யிற வேலை தனியாச்செய்கிறீர்கள் இது கூடச்செய்யாவிட்டால் நான் மனிசன் இல்லை''
அவர் வேகமாய்ப் போனார் கியூவையும் விலக்கிக்கொண்டு திரும்பி வந்தார்.
'அருகில் ஒரு குளிர் கோலாவை வைத்தார்.இதைக்குடியுங்கோ'' காசைக்கூட வேண்ட மறுத்தார்.
அட இப்படி மனிதர்களா என்று நினைப்பதற்கு முன்னர்,
'' இது என் மச்சானுடைய பைல் இதை முடிச்சுத்தந்தால் நான் வீட்டுக்குப்போய்விடுவேன்'' என்றார் அவர் உரிமையோடு.

Read more...

அக்ஷய திரிதியையன்று நகை வாங்க வேண்டுமா?

Tuesday, May 11, 2010

இந்த வருடம் மே மாதம் எட்டாம் தேதி 'அக்ஷய திரிதியை'. 'அக்ஷய திரிதியை' என்றால் என்ன? நம்மில் பலருக்குத் தெரிந்ததெல்லாம் அக்ஷய திரிதியை அன்று கடைக்குப் போய் நகை வாங்குவதுதான். 'அக்ஷய திரிதியை' அன்று நகை வாங்கினால் நம் வீட்டில் செல்வம் பொங்கும் என்றொரு நம்பிக்கை. இது சரியானதா?

முதலில் 'அக்ஷய திரிதியை' என்றால் என்னவென்று பார்ப்போமே. 'அக்ஷய' என்றால் எடுக்க எடுக்கக் குறையாதது என்றொரு பொருளுண்டு. அக்ஷய பாத்திரம் தமிழிலக்கியங்களிலும் உண்டு. மணிமேகலைக்கு பசிப்பிணி போக்கும் 'அட்சய பாத்திரம்' கிடைத்தது. அன்று முதல் மக்களின் பசியைப் போக்குவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்த மணிமேகலை, அவள் மறைவிற்கு பின் தெய்வமாகப் போற்றப்பட்டாள்.

'திரிதியை' என்பது அமாவாசை அல்லது பௌர்ணமியிலிருந்து மூன்று நாள் கழித்து வரும் நாள். 'அக்ஷய திரிதியை' எனபது சித்திரை மாதம் அமாவாசை முடிந்த வளர்பிறையின் மூன்றாம் நாள்.

வளர்பிறைக்கே ஒரு சிறப்புண்டு. இருளாய் இருந்த வானத்தில் நிலா ஒவ்வொறு நாளும் வளர்ந்து முழு நிலவாய் மாறுவதே ஒரு அழகுதான்.

இதை வைத்துப் பார்க்கையில் அக்ஷய திரிதியை அன்று செய்யும் காரியங்கள் வளர்பிறை போல வளரும்; அட்சய பாத்திரம் போல குறைவின்றி இருக்கும் என்று பொருளாகிறது. ஆனால் இது தங்கம் வாங்கத் தோற்றுவிக்கப்பட்டதல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அக்ஷய திரிதியை ஏழை எளியோருக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டதே. அன்றைய தினம், பசித்தோர்க்கு உணவு படைத்தால் ஆயுள் அதிகரிக்கும். இயலாதோர்க்கு உடை கொடுத்தால் பதவி உயர்வு வரும் என்றெல்லாம் புராணங்களில் சொல்லியுருக்கிறது. தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்பது பின்னால் வந்த நம்பிக்கையாக இருக்கலாம்.

'அன்னையர் தினம்', 'மகளிர் தினம்', புதிதாய் 'காதலர் தினம்' என்றெல்லாம் வாழ்த்து அட்டையோடு கொண்டாடுகிறோம். அதுபோல 'அக்ஷய திரிதியை' தினத்தை நாம் 'நல்லுதவி தின'மாய் கொண்டாடலாம். இதற்கு 'மணிமேகலை தினம்' என்றும் பெயர் சூட்டலாம். இதுதான் நாம் நம் முன்னோருக்குச் செய்யும் நன்றியாகும்.

Read more...

நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா.......?

Thursday, May 6, 2010

நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா.......??

  
 
ஒரு
சலவை தொழிலாளிகிட்ட ஒரு நாயும், கழுதையும் இருந்துச்சு.  
 ஒரு நாள் அந்த சலவை தொழிலாளி ராத்திரி நல்லாதூங்கிட்டுருக்கும்போது  
வீட்டுக்குள்ள
கதவை உடைச்சிட்டு ஒருதிருடன் வந்துட்டான்.
சலவை
தொழிலாளி நடப்பது தெரியாமல்நல்ல உறக்கத்திலிருக்க,  
திருடனைப்பார்த்த
நாய் குரைக்காமல்கம்முன்னு இருந்துச்சு.
சரியா
சோறே போடறதில்லை,  
இவனுக்கு
நாம ஏன் உதவிபண்ணனும்னு நாய் குரைக்கவில்லை.  
அதைப்பார்த்த
கழுதைஎன்னடா இவன் கம்முன்னு இருக்கான்,
குரைச்சு
முதலாளியைஎழுப்புவான்னு பார்த்தா சும்மா இருக்கான்,
சரி
நாமளாவது சத்தம்போட்டு முதலாளிக்கு திருடன் வந்ததை அலர்ட் பண்ணுவோம்னுகத்த ஆரம்பிச்சுது.  
சத்தம்
கேட்டதும் கள்ளன் ஓடிவிட்டான்.
சத்தத்தில்
தூக்கத்தில் இருந்து எந்திருச்ச சலவைதொழிலாளி  
ஒருகட்டையை
எடுத்து பளார்னு கழுதை தலைல ஒரே அடி.  
கூறுகெட்டகழுதை
நேரங்காலம் தெரியாம கத்திகிட்டு இருக்கேன்னு கழுதையைதிட்டிவிட்டு திரும்பவும் படுத்துகிட்டான்.
 
நீதி: ஆபிஸ்ல என்னவேலை கொடுத்திருக்கோ அதை மட்டும் தான் செய்யனும் ஓவரா சீன் போட்டா இப்படித்தான்.
 

இந்தக்கதை
மற்றொரு கோணத்தில்...
 
கழுதை கத்தியதும் எழுந்த சலவைத்தொழிலாளி,  
கழுதை
சும்மாகத்தியிருக்காது காரணாமாகத்தான் கத்தியிருக்கும்  
என்று
எழுந்துபார்த்து திருடன் வீட்டுக்கு  
வந்ததால்தான்
கழுதை கத்தியதுஎனப்புரிந்துக்கொண்டான்.  
அடுத்த
நாள் கழுதைக்கு வகைவகையானசாப்பாடு போட்டான்.  
நாயைக்கண்டுகொள்ளவே
இல்லை.
கழுதையோட
ஆர்வக்கோளாறும், விசுவாசமும் முதலாளிக்குபிடித்துவிட
இவன்
ரொம்ப நல்லவன்டா எவ்ளோ வேலைகொடுத்தாலும் செய்யிறான்னு முதலாளியின் எல்லாவேலைகளையும் கழுதையை செய்ய வைத்தான்.  
நாய்செய்துக்கொண்டிருந்த
வேலையும் கழுதையின் மேல்சுமத்தப்பட்டது.
நாய்
சுகமாக வேலையே செய்யாமல் கழுதையைபார்த்து சிரித்துக்கொண்டிருந்தது.  
வேலை
செய்து அலுத்துப்போனகழுதை இப்போது வேறு வேலைக்கு சிவி அனுப்பிகிட்டிருக்கு...
 
நீதி: ஆபிஸ்ல ஓவரா சீன்போட்டா இப்படியும் நடக்கலாம். 
  
 

Thanks & Regards

J.Kaarthik
 

Read more...

ஆனந்த தாண்டவம்

Saturday, May 1, 2010

முக்கோண காதல் கதை.

என்ஜினீயரிங் படித்த சித்தார்த்தந்தை வேலை பார்க்கும் கிராமத்துக்கு வருகிறார். அங்கு மின் வாரிய அதிகாரி மகள் தமன்னாவின் குசும்பத்தனங்கள் பிடித்து காதலாகிறார். இருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்கின்றனர்.

திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. அப்போது அமெரிக்க பணக்கார இளைஞன் பெண் கேட்டு வரதமன்னா குடும்பம் மனம்மாறுகிறது. திருமணத்தை நிறுத்துகின்றனர். தமன்னாவும் அமெரிக்க மாப்பிள்ளையை மணக்க விரும்புகிறார். நொருங்கும் சித்தார்த்தன் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்படுகிறார். புத்திமதி சொல்லி அமெரிக்காவுக்கு உயர் படிப்பு படிக்க அனுப்புகின்றனர். அங்கு ருக்மணி நட்பாகிறார். தமன்னாவும் கணவருடன் அமெரிக்கா வருகிறார்.

சித்தார்த் நடத்தைகள் ருக்மணிக்கு பிடிக்க காதல். தமன்னாவும் சித்தார்த்தை சந்திக்க பழைய நட்பு மலர்கிறது.

ஒரு கட்டத்தில் தமன்னா கணவன் பல பெண்களுடன் தொடர்பு வைத்துள்ள விஷயம் தமன்னாவுக்கு தெரிய உடைகிறார் சித்தார்த்துக்கும் ருக்மணிக்கும் திருமண நிச்சய ஏற்பாடுகளை இரு வீட்டாரும் செய்கின்றனர். கணவனை உதறிவிட்டு சித்தார்த்தை கை பிடிக்க தமன்னா விரும்புகிறார். இருவரில் யாரை மணக்கிறார் என்பது கிளைமாக்ஸ்...

எழுத்தாளர் சுஜாதாவின் பழைய கதை திரைவடிவ மாகியுள்ளது. ஆழமான காதல், அமெரிக்க மோகம் இரண்டுக்கும் முடிச்சு போட்டு திரைக்கதையை நகர்த்தியுள்ளார் இயக்குனர் காந்தி கிருஷ்ணா, மலை பிரதேச ஜில்லிப்பும் சித்தார்த் தமன்னா ஒருத்தரை யொருத்தர் மாட்டிவிடும் குறும்புகளும் அழகானவை. கடைசி நேரம் மாப்பிள்ளை மாறியதால் குடித்து வாந்தி எடுத்து புலம்பும் சித்தார்த் அழுத்தம் பதிக்கிறார். பழைய காதலி கணவன் அயோக்கியன் என தெரிந்து அவளை காப்பாற்ற துடிப்பது நிறைவு.

தமன்னா முழு நடிப்பை வெளிப்படுத்தி கதையை தன் வசமாக்கி கொள்கிறார். விளையாட்டுத்தனங்கள், போதை அடிமைத்தனம் வாழ்க்கை சிதைந்து வலி. என நிறைய பரிணாமங்களை அள்ளித்தெளிக்கிறார். முடிவு பரிதாபம்.

தமன்னாவின் முதல் பாதி லூசுத்தன நடவடிக்கைகள் காதலின் வலிமையை குறைப்பதோடு கிளைமாக்சில் அவர் மேல் அனுதாபம் வருவதற்கு பதில் வெறுப்பை சிந்தவைக்கிறது. தன்னை தூக்கி எறிந்து இன்னொருவனை மணந்தவள் பின்னால் சித்தார்த் அலைவதும் கேரக்டரை சிதைக்கிறத. ருக்மணி கவிதையாய் அழகூட்டுகிறார். ஜி.வி. பிரகாஷ் இசை ஏமாற்றம். வைரமுத்து பாடல் வரிகள் மனதில் நிற்கிறது. சங்கர் கேமரா மலையழகையும் அமெரிக்க பிரமாண்டத்தையும் அள்ளி இறைக்கிறது.

Read more...

கார்த்திக் அனிதா

நட்பாக பழகும் இளம் ஜோடி காதலர்களாகும் கதை...

கோட்டா சீனிவாசராவும் ராஜன் பி.தேவும் நண்பர்கள், எதிர் எதிர் வீட்டில் வசிக்கிறார்கள். தோட்டாவின் மகன் ரத்தனும் ராஜன் பி.தேவின் மகள் மஞ்சுவும் சிறு வயது முதலே நட்பாக பழகுகிறார்கள். ஒரே கல்லூரியிலும் படிக்கின்றனர்.

ரத்தன்- மஞ்சு இடையே அடிக்கடி தகராறு. ஒருவரையொருவர் சிக்கலில் மாட்டி விட்டு சந்தோஷப்படுகின்றனர்.

பெண்களை ராக்கிங் செய்ததாக ரத்தன் மேல் ஆத்திரப்படும் கல்லூரி முதல்வர் தந்தையை அழைத்து வரச்சொல்கிறார் ரத்தன் போலி தந்தையை ஏற்பாடு செய்து முதல்வரை சந்திக்க வைக்கிறார். மஞ்சு இடையில் புகுந்து அவர் போலி என்று போட்டு உடைக்க ரத்தன் சஸ்பெண்டாகிறார். நட்பில் விரிசல் ஏற்படுகிறது. மஞ்சுவை பழி வாங்க துடிக்கிறார் ரத்தன்.

அப்போது மஞ்சுவுக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. ரத்தனை பிரிய மனமின்றி காதல் வயப்படுகிறார் மஞ்சு. திருமண தேதி நெருங்க ரத்தனுக்கும் காதல் பிறக்கிறது. இருவரும் காதலை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். பின்னர் எப்படி இணைந்தார்கள் என்பது கிளைமாக்ஸ்...

இளமைப்பொலிவோடு காதல் ரசம் சொட்ட கதையை நகர்த்தியுள்ளார் இயக்குனர் ஸ்ரீஹரி... ரத்தன், மஞ்சுவின் சிறுசிறு முட்டல் மோதல்கள் ரசனையானவை... ரோட்டில் கோடு போட்டு பந்தயம் கட்டி ஒருத்தருக்கொருத்தர் தலையில் கொட்டி சேர்ந்து விழுவது ஆரவாரம். ரத்தனின் நண்பர்களை மாட்டி விட்டு மஞ்சு சண்டை போடுவது யதார்த்தம்.

திருமணம் நிச்சயமானதை ரத்தனிடம் மஞ்சு வருத்தமாய் சொல்ல சனியன் ஒழிந்தது என அவர் சந்தோசத்தில் குதிப்பது... எதிர்பாராதது...

தந்தை இறந்ததும் ஆதரவற்ற ரத்தனுக்கு உணவு தந்து அக்கறை காட்டும் மஞ்சுவின் அன்பு அழுத்தம்... மஞ்சு மேல் தனக்குள்ளும் காதல் ஒளிந்திருப்பதை உணரும் ரத்தன் அதை வெளிப்படுத்த இயலாமல் தவிக்கையில் மனதில் நிற்கிறார். பெங்களூரில் வேலைக்கு சென்ற பின் ரத்தனும் தன்னை காதலிப்பதை ரூபாய் நோட்டில் அவர் எழுதி வைத்திருப்பதில் இருந்து அறிந்து மஞ்சு அழுது துடிக்கும் போது எல்லோரையும் அழ வைக்கிறார். இருவரும் போட்டி போட்டு காதலை பிழிந்துள்ளனர்.

வில்லனாக பார்த்த கோட்டா சீனிவாசராவும், ராஜன் பி.தேவும், குணச்சித்திர வேடத்தில் பளிச்சிடுகின்றனர். அடடே மனோகர், சிங்கமுத்து காமெடி கலகலப்பு...

பழைய கதையை புதுசாக்கியுள்ளனர். முதல் பகுதியில் இருந்த வேகம் பிற்பகுதியில் குறைந்தாலும் காதல் நெஞ்சை நிரப்புகிறது. கிளைமாக்ஸை இன்னும் மெருகேற்றி இருக்கலாம். ஜாக் ஆனந்த் இசையில் பாடல்கள் கேட்கலாம்.

Read more...

கதை சொல்லும் கேட்கும் பழக்கம் உண்டா ?

கதை சொல்லும் பழக்கம் உண்டா ? / கதை கேட்கும் பழக்கம் உண்டா ? என நான் என் நண்பர்களைக் கேட்பதுண்டு. இக்கேள்விக்குக் கிடைக்கும் பதில்கள் கதை என்பதன் பொருள் இன்று எவ்வாறு புரிந்து கொள்ளப்படுகிறது என்ற வியப்பு எனக்கு ஏற்ப்பட்டது.
கதை என்ற சொல்லுக்கு நிகழ்ச்சி, செய்தி, நிகழ்ச்சி விபரம், விரிவுரை, விளக்கம், சென்ற கால வரலாறு, தோற்ற வளர்ச்சி விபரம், பத்திரிகைச் செய்தி, பத்திரிகைக் கட்டுரை, வாய்மொழிக் கூற்று, நம்ப முடியாதச் செய்தி, காலம் கடந்த செய்தி, கட்டுக்கதை, பொய், சுருக்கிக் கூறுவதானால் விவரங்களை விட்டு விட்டுக் குறிப்பாகப் புலப்படுத்துவது எனப் பல பொருள் இன்று உண்டு.
கதைச் சொல்லுபவர்களுக்குக் கதை கூறுவோர், கதைஞர், கதை எழுத்தாளர், கதாசிரியர், கதையளப்பவர், குழந்தை வழக்கில் பொய்யர், புளுகர் எனவும் பல பொருள் உண்டு.
ஒரு 'கதைச்சொல்லி', 'கதை' என்பதற்கு பயன்படுத்தும் கட்டமைப்பு பொதுவாகப் பின் வரும் நான்கு நிலைகளில் அமையும்.
1. நிகழ்ச்சி
2. இரண்டு வழிகளில் ஒன்றைத் தேர்வு செய்யவேண்டிய நிலை
3. விளைவாக உண்டான செயல் (காரண காரியத் தொடர்பு)
4. பலன். (உள்ளார்ந்த அல்லது வெளிப்படையான)
ஒரு நல்ல கதைச்சொல்லியை இனம் காண என் மனதில் தோன்றும் சில கேள்விகள்.
1. கதையின் பரிமாணம் என்ன ?
2. மாற்றம் என்பது கதையில் எங்கு எவ்விதம் சொல்லப்படுகிறது ?
3. தற்போதைய சூழ்நிலைக்கு இக்கதை எவ்விதம் பொருந்துகிறது ?
4. கதைச்சொல்லியின் நாக்கு இக்கதையைச் சொல்ல முடிவெடுத்தது எப்படி ?
5. இக்கதை கதைச்சொல்லியால் ஏன் இப்படிச் சொல்லப்படுகிறது ?
6. கதைச்சொல்லியின் புலனுணர்வு கதையில் வெளிப்படுகிறதா ?
கதை பொதுவாக கதை கேட்பவரின் வாழ்க்கைச் சூழ்நிலைகளை விவரித்துச் சொல்லப்படும் காலம் என்ன என்பதை உணர வைப்பது. கதை என்பது வாழும் காலத்தின் கலாச்சார சூழ்நிலைகளின் பிரதிபலிப்பு என்றும் சொல்லப்படுவதுண்டு.
ஒரு கருத்தாழமிக்க கதையைச் சொல்லிக் கதை கேட்போரைக் கவர்வது என்பது கதை சொல்பவர் உணர்ந்த தீர்வையும், முடிவையும், கதை கேட்பவரும் அதே அலைவரிசையில் உணரவைப்பதும், கதை கேட்பவரை அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று செயலாற்றத் தூண்டும் சக்தி படைப்பதில் உள்ளது என்பேன்.
கம்ப்யூட்டரில் ஃபிளாஷ் / பவர் பாயிண்ட் பயன்படுத்திக் கதை சொல்லும் உத்தி எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. சிறிய ஃபிளாஷ் வடிவில் தேர்ந்த ஒலி நயத்துடன் உருவாக்கப்பட்ட கதைகள் இணையத்தில் எங்காவது உண்டா ?
'கதைச்சொல்லி' கதையை வாய்விட்டுச் சொல்வதும், அதனைக் கேட்பவர் உடனே அதற்கு எதிர்வினையாற்றும்படியாக ஒரு சூழலும் இன்று இல்லை. அந்த வாய்ப்பு ஏன் குழந்தைகளுக்கு மட்டும் உள்ளது ?
நான் என் சிறு வயதில் வரலாறு பாடத்தில் வந்த ஒரு நிகழ்ச்சிக்குக் கேட்ட கேள்வி இன்றும் நினைவில் உள்ளது. அசோகர் குளம் வெட்டினார், சாலையோரம் மரம் நட்டார் என்று வாய்விட்டுச் சொல்லிக் கொடுத்த ஆசிரியரிடம், குளம் வெட்டட்டும், மரம் நடட்டும் அதுக்கென்ன வந்தது ? இதிலென்ன விசேஷம் ? என்று கேட்ட கேள்விக்குப் புரியும்படியாகச் சரியான பதில் கிடைக்கவில்லை. அச்செயலுக்குப் பின் உள்ள பொருள் ஒன்றல்ல பல.
இன்று கதை என்பது ஒலி/ஒளிபரப்பு மூலமாக, மென் நூல்/புத்தக வடிவில் வாசிக்க, இணையத்தளங்கள் மூலமாக என கேட்பவரின் பங்களிப்பு என்பதை பின் நகர்த்தி, சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டுப் போவதும், புரிந்து கொள் அல்லது தலையைச் சொரிந்து கொள் என்று பல நிலைகளியில் உள்ளது.
நாம் கதைகள் சூழ்ந்த உலகில் வாழ்கிறோம். மறக்க முடியாத கதைகள் என்பது நம் வாழ்நாள் முழுவதும் நம் நினைவில் நீச்சல் அடிப்பவை. கதைகள் நாம் வாழும் சமூகத்தை நாம் அறிந்த அறிவிற்கு ஏற்றபடி புரிந்துகொள்ள உதவுபவை. நாம் கதைகளை முடிவெடுக்கவும், சண்டைச் சச்சரவிலிருந்து விடுபடுவதற்கும், வழிகாட்டுதலுக்கும் மேலும் சில தகவல்களை அறியவும் பயன்படுத்திக்கொள்கிறோம்.
'கற்பனையைத் தூண்டுவது' என்று கதைப் பற்றிக் சொல்வதைக் கேட்டு நான் யோசிப்பதுண்டு. கற்பனையைத் தூண்டி கனவுலகில் சஞ்சரிக்க ஒரு கதை உதவினால், அக்கற்பனை என்பது நல்ல கனவுகளை ஏற்படுத்தினால், அக்கனவு நல்ல செயலையும், அச்செயல் நல்ல விளைவுகளையும் ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. கெட்ட கனவும் ஏற்பட்டு தீமைகள் பலவும் நிகழ்வது யதார்த்தமான ஒரு உண்மை.
எனக்கு ஒரு கதை என்பதை எப்போது(மே) எப்படி சிறப்பாகப் பயன்படுத்த முடியும், மேலும், ஏன் அவ்வாறு செய்ய முடிவதில்லை என்ற கேள்வி உண்டு.
கதைகள் சொல்லும் நீதி என்பது சிலவற்றில் வெளிப்படை. பலவற்றில் உள்ளர்த்தம். மேலும் பலவற்றில் இல்லவேயில்லை என்றும் சொல்லலாம்.
இந்தச் சூழலில் எந்தவிதமானக் கதையைக் 'கதைச்சொல்லி' சொல்ல வேண்டும் என்று கேட்டால், அது கதை கேட்பவரின் தகுதியைப் பார்த்து சொல்லாம் என்ற பதில் வரும்.
சொல்லப்பட்டக் கதையை ஒரு நபர் புரிந்து கொண்டு பயன் அடைவதற்கும், அக்கதையால் கேட்பவர்க்கு ஒரு பயனும் இல்லாமல் போவதற்கும் சரிசமமான வாய்ப்பு உண்டு.
ஒருவர் நல்லவரா அல்லது கெட்டவரா ?
வாழ்க்கைப் பற்றிய எந்தவித மதிப்பீடுகள் ஒருவரை உயர்த்தும்?
எனது இச்செயல் எனக்கு நற்பெயர் தருமா அல்லது கெட்ட பெயர் தருமா?
எனது தவறுகளுக்கு என்னால் பாதிக்கப்பட்டவரின் எதிர்வினை என்பது எப்படியிருக்கும் ?
மேலும் அதற்கு நான் என்ன செய்வது ?
போன்ற கேள்விகளுக்கு விடை தேட நான் கதை கேட்பதுண்டு.
எனக்குக் கதை சொல்லும் கதைச்சொல்லிகள், என்ன நடந்தது என்று மட்டும் சொல்லிவிட்டு என்ன செய்யலாம் என்பதை விவாதத்திற்கு விடும் காலம் ஒரு சவாலான இடம்.
நல்ல 'கதைச்சொல்லியை' இனம் காண்பது சற்று கடினம். நல்ல கதைச்சொல்லியும் கதையும் அமைவது நம் கையில் தான் உள்ளது. கதைச்சொல்லி என்பவர் நம்மைவிட வயதில் சிறியவரக இருக்கலாம், பல விதத்தில் நமக்கு இணையானவராக இல்லாமல் இருக்கலாம் ஆனால். அவரிடம் உள்ள கதையைச் சொல்ல வைக்கும் ஆற்றல் நம்மிடம் மட்டுமே உண்டு. அவராக வந்துச் சொல்வது என்பது இன்றைய காலத்தில் நடவாத காரியம்.

Read more...

ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம்

 
ஓஷோ பல்கலைக்கழகத்திலே படிச்சு கிட்டிருந்தபோது மாணவர்களுக்கான சாரணர்
அணியிலே சேர்ந்திருந்தார். பயிற்சி கொடுக்கிறபோது சார்ஜன்ட், "லெப்ட்
டேர்ன் ரைட் டேர்ன்" அப்படீன்னு சொல்லுவார். எல்லா மாணவர்களும்
திரும்புவாங்க. ஓஷோ திரும்பமாட்டார்.
சார்ஜண்ட் வந்து கேட்பார் "ஏன்? காதிலே ஏதும் கோளாறா" அப்படீன்னு. ஓஷோ
சொன்னார், "காதிலே எந்தக் கோளாறும் இல்லை. இடது பக்கமோ வலது பக்கமோ
எதுக்காகத் திரும்ப னும்ணு யோசிச்சேன், அதனால திரும்பலை" அப்படீன்னு.
நான் பொதுவாச்சொல்றேன், ஒரு சிந்தனையாளர் – எதிர் காலத்திலே ஞானியாக
மலரப் போகிறவர் – சாரணப் பயிற்சியிலே வெற்றி பெறலை. அவருக்குப் பொருந்தாத
துறையிலே சாதிக்கணும்னு அவர் நினைக்கலை.

இன்னைக்கு என்ன நடக்குது? ஏதாவது ஒரு துறையிலே முயற்சி செய்து தன்னால
அதில் ஈடுபட முடியாதபோது, ஒண்ணு, மன உறுதியோடு மறுபடியும் முயற்சி செய்து
ஜெயிக்கலாம். இல்லை, மனசு ஒத்து "இது நம்ம துறை இல்லை", அப்படீன்னு முடிவு
பண்ணி நகர்ந்துடலாம்.

ஆனா, சிறிசா ஏற்படற தோல்வியை ரொம்பப் பெரிசா எடுத்துட்டு, நாம எதுக்குமே பொருந்தவில்லை போலிருக்கு அப்படீன்னு பலபேர் நினைச்சுடறாங்க?
நான் பொதுவாச் சொல்றேன், ஒரு விஞ்ஞானி கவிஞராக முயற்சி செய்தால் அந்தப்
பரிசோதனை தோல்வியிலே முடியும். ஒரு கவிஞன் விஞ்ஞானியாக முயற்சி செய்தால்
அதுவும் பாதியிலே திசை திருப்பும். (அப்படி ஒரு கவிஞர் பாதியிலே விஞ்ஞானப்
படிப்பை விட்டு வெளியேறி, பிறகு தமிழ் படிச்சு இப்ப ரொம்பப் பிரபலமா
இருக்கார். யார்னு சரியா எழுதற முதல் மூன்று வாசகர் களுக்கு, அந்தக்
கவிஞருடைய புத்தகம் பரிசாக அனுப்பப்படும்)

அதனாலே, எல்லோரும் எல்லாமும் ஆக முயற்சி செய்யாம, தங்கள் தனித்தன்மை
என்னான்னு தெரிஞ்சு அந்தத் துறையிலே சிறந்து செயல்பட எல்லா முயற்சியும்
எடுத்துக்கணும்.

"எல்லாருக்கும் ஒவ்வொன்று எளிது" அப்படீன்னு ஒரு பழைய பாட்டு இருக்கு.
நான் பொதுவாச் சொல்றேன், நாம் எதை விரும்ப றோமோ அதை ரசிச்சு
செய்கிறபோது அந்த வேலை ஒரு சுமையாத் தெரியாது. சுகமாத் தெரியும். அதை
விட்டுவிட்டு, வராத துறையிலே முயற்சி செய்து தன்னைத் தானே எதற்கும் உதவாத
ஆள்னு முடிவு செய்யறது ரொம்ப தப்பு.

நம்ம வாழ்க்கையிலே நடக்கிற சம்பவங்கள் ஒவ்வொண்ணும் மறந்து போறதுக்காக
இல்லை. திரும்பத் திரும்ப நினைச்சுப் பார்த்து, அதிலே பயன்படக் கூடிய
விஷயங்களை மத்தவங்களுக்கு சொல்றதுக்காகத்தான்.

ஓஷோவைப் பற்றி ஆரம்பத்திலே சொன்னேன். அவர் மகாத்மா காந்தியடிகளைப் பல
இடங்களிலே மிகக் கடுமையா விமர்சனம் செய்திருக்கார் ஆனா, காந்தியடிகளுடைய
சுயசரிதையைப்பற்றிச் சொல்கிறபோது. "இவ்வளவு வெளிப்படையா, தன்னைப் பற்றித்
தானே விஞ்ஞானப்பூர்வமா ஆய்வு செய்து எழுதறது ரொம்ப கஷ்டம்" என்கிறார் ஓஷோ.
நான் பொதுவாச் சொல்றேன், எல்லா விஷயங்களைப் பற்றியும் நாம சரியா
கருத்துச் சொல்வோம். நம்மைப் பற்றி தெளிவாக இருக்கறோமா? "என்னைப் பற்றி
என்ன நினைக்கிறீங்க" அப்படீன்னு அடுத்தவர்களைக் கேட்போம் இது தேவையில்லை.
நம் பலங்களைப் புரிஞ்சுக்கறதும் நம் பலவீனங்களைப் புரிஞ்சுக்கறதும் தான் உண்மையிலேயே நம்மைப் புரிஞ்சுக்கறது!

நம்மை உணர்வதே உண்மையை உணர்வது

உண்மையை உணர்வதே உயர்வுகள் தருவது.

Read more...

பின்லேடனும் ப்ரானிக் ஹீலிங்கும்!

கோவையில் எனக்குத் தெரிந்த துன்பர் (அன்பர் என்பதன் எழுத்துப்பிழை அல்ல) ஒருவர் இருக்கிறார். ரொம்ப சாந்த சொரூபியான முகம், பகவான் ரஜனீஷின் ஓன் பிரதர் போல சுய எண்ணம், அவரைப்போலவே தாடி, தொப்பை என்று அடையாளங்கள். ரயில்வேயிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஆசாமி. பெயர் வேண்டாம். துன்பர் வருத்தப்படுவார்.

பத்து வருடங்களுக்கு முன்னால் ஒரு பதிப்பகத்தின் வேலைகளைத் தூக்கிக்கொண்டு அவ்வப்போது அலுவலகத்துக்கு வருவார். பெரும்பாலும் அது மதிய நேரமாகவே இருக்கும். இதனால் ஏதாவதோர் ஓட்டலில் ஃபுல் மீல்ஸ் கட்டிவிட்டு நேராக வந்துவிடுவார். என்னிடம் சமர்ப்பிக்க வேண்டியவைகளை சமர்ப்பித்துவிட்டு நான் கணினியில் வேலையை ஆரம்பித்ததும் முன்னால் உள்ள இருக்கையில் தன் தியானத்தை ஆரம்பித்து விடுவார். உலகத்திலேயே தியானம் செய்யும்போது குறட்டை விடும் ஒரே தவஞானி அவர்தான். அவரது குறட்டையொலி வேலையைக் கெடுக்க ஆரம்பிக்கும்போது பேப்பர் வெயிட்டை எடுத்து அந்த ஆட்டுமண்டை மீது வீசவேண்டும் என்கிற ஆவலை அடக்கிக்கொண்டு, தடால் புடால் என்று எழுந்துகொள்வதோ, சப்தமெழுப்பக்கூடிய ஒன்றைக் கீழே போடுவதோ ஓரளவு பயனைத் தரும். அடிக்கடி புனேக்குப் போய்வருகிற பழக்கத்தையும் அப்போது அவர் கொண்டிருந்தார். அமிர்த யாத்ரிகன் என்கிற பொருள்படும் பெயரும் அவருக்கு ஓஷோவின் ஆசிரமத்திலிருந்து கொடுக்கப்பட்டிருந்தது.

உலகத்திலேயே உண்மையான சமத்துவம் பேணப்படும் ஒரே இடம் ஓஷோ ஆசிரமம்தான் என்பதைத் தன்னை அறிந்தவர்களுக்கெல்லாம் சொல்லாமல் சொல்லிக்கொண்டே அவரது யாத்திரை நிகழ்ந்துகொண்டிருந்தது. எவன் வேண்டுமானாலும் அங்கே போய் தீட்சை பெற்றுக்கொள்ளலாம் என்கிற அளவுக்கு ஓஷோவுக்குப் பிறகு அங்கே சமரசம் நிகழ்ந்துவிட்டிருக்க வேண்டும். ஏனென்றால் ஓஷோ என்கிற பகவான் ரஜனீஷ் இருந்த காலத்தில் இவரைப் போன்ற ஒருவர் உள்ளே போயிருந்தால் உதைத்தே அனுப்பியிருப்பார்.

இவ்வளவு சிறப்புத் தன்மைகள் வாய்ந்த துன்பர் ஒருநாள் அற்புதம் ஒன்றை நிகழ்த்திக்காட்டினார். சிறிது காலமாக, தான் ப்ரானிக் ஹீலிங் என்கிற ரெய்கி வைத்திய முறையைக் கற்று வருவதாகச் சொல்லி தன் பராக்கிரமத்தை என் உள்ளங்கையில் கொட்டிக் காட்டினார். அதாவது, என் இடது உள்ளங்கையை விரித்தபடி நீட்டச் சொன்னார். நானும் இந்த டுபாக்கூர் என்னத்தைப் பெரிதாய்க் கிழித்துவிடப்போகிறது என்கிற தைரியத்தில் கையை நீட்டித் தொலைத்தேன். தன் உள்ளங்கைகளைச் சற்று பரபரவென்று தேய்த்துவிட்டு கிட்டத்தட்ட ஐந்தடி தூரத்தில் தன் வலது உள்ளங்கையை என் இடது உள்ளங்கையைப் பார்க்குமாறு நீட்டினார் அவர். எனது இடது உள்ளங்கையில் எர்த் அடித்ததுபோல சிறு ஷாக்கை உணர்ந்தேன். பதறிப்போய் கையை உதறினேன். துன்பர் மூஞ்சியில்தான் என்னே ஒரு புஞ்சிரி!

சரி, இப்போது எதற்கு இந்த சம்பவம் என்று கேட்கிறீர்களா? காரணம் இருக்கிறது. சிறிது காலம் கழித்து ஓர் இளம் துறவியின் பெருமைகளைப் பேண ஆரம்பித்தது துன்பரை அடிக்கடி என்மீது ஏவிவிடும் அந்த வாடிக்கையாள நிறுவனம். பெயர் வேண்டாம். நிறுவனம் வருந்தும்.

அந்தத் துறவியின் சில புகைப்படங்களை என்வசம் காட்டி அவருக்கு ஒரு சிறு புரோஷர் டிசைன் செய்ய வேண்டும் என்பதாக அது கேட்டுக்கொண்டது. திருவண்ணாமலையின் பின்னணியில் சில படங்கள் காணப்பட்டன. ஹடயோகி போல ஆசனங்களில் காணப்பட்டார் இளம் துறவி. புகைப்படங்களிலிருந்து அவர் ஒரு பாலயோகி என்பது நன்றாகவே தெரிந்தது. பாலயோகிக்கு கர்னாடகத்தில் ஆசிரமம் அமைக்க யாரோ கொடுத்திருந்த இடத்தின் படங்களும் அதில் இருந்தன. அந்த இடம் வெறும் பொட்டலாக இருந்ததாகவும் ஏதோவொரு மரத்தின் புகைப்படம் மட்டும் அவற்றில் திரும்பத் திரும்ப இடம் பெற்றதாகவும் ஞாபகம்.

எந்தக் காரணத்தாலோ அந்த வேலையை நான் செய்துகொடுக்கவில்லை. அதோடு அவர் எனது வாடிக்கையாளரைக் காட்டிலும் பெரிய மனிதர்களின் கண்களில் பட்டு இப்போது மேலும் புகழ்பரவத் தொடங்கியிருந்தார் என்பதை மட்டும் நான் அவ்வப்போது கவனித்து வந்தேன். ரிஷிகேசத்தின் மூலரான சிவானந்தர் முதலான யோகிகள் பிறந்த இந்தத் தமிழ் பூமியில் இவ்விதமான பாலயோகிகள் பிறப்பதும் பிராபல்யம் பெறுவதும் உவப்பான செய்திகள்தானே!

(இருந்தாலும் எனக்கு இந்த பால யோகிகளைப் பார்த்தாலே பங்காளியைப் பார்த்ததைப் போல பற்றிக்கொண்டு வரும். இவருக்கு யோகி என்கிற புகழாவது இருக்கிறது. அதை வைத்துக்கொண்டாவது தீண்டுவதற்குப் பெண்களே கிடைக்காத கழிவிரக்கத்தைத் துடைத்துக்கொள்ளலாம். எனக்கு அதற்குக்கூட வழியில்லையே என்பதே அடிப்படை ஆதங்கம்!)

அதன்பிறகு லக்ஷக்கணக்கில் விற்பனையாகும் ஒரு தமிழ் வாரப்பத்திரிகை பாலயோகியைத் தங்கத் தாம்பாளத்தில் தாங்க ஆரம்பித்தது. அவர் எழுதியதாக மற்றவர்கள் எழுதிய தொடர் கட்டுரைகளை அது தொடர்ந்து வெளியிட ஆரம்பித்தது. இதனால் அவரது புகழ் பட்டி தொட்டியெல்லாம் பரவ ஆரம்பித்தது. அந்த வாரப்பத்திரிகை சார்ந்த ஒரு முக்கிய நபருக்கு இருந்த உடற்கோளாறை பாலயோகி தன் சக்தியால் தீர்த்து வைத்ததால்தான் இந்த தண்டோரா வைபவம் என்பதாக அரசல் புரசலாக பேச்சு எழுந்தது. ஏனென்றால் அந்த வாரப்பத்திரிகை இப்படி வேறு யாரையும் அதுவரை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடியதேயில்லை என்பதே பதிவு.

அந்தப் பத்திரிகையில் வரும் அவரது தொடரை வேகமாகத் தாண்டிப் போய்விடுவது எனது இயல்பு. பொறாமையால் அல்ல. அதுவே எனது இயல்பு. அவரது கட்டுரை என்பதல்ல, வாரப்பத்திரிகைகள் வெளியிடும் எந்தத் துறவியின் கட்டுரைகளையும் வாசிப்பது எனக்கு வழக்கமில்லை. அதோடு மீசையில்லாதவோர் ஆணின் முகத்தைப் பதித்திருக்கும் அந்தப் பக்கங்களில் பார்க்கவும்கூட என்ன இருக்கிறது? பெண்கள் பக்கம் என்றாலாவது பேணிப் பாதுகாக்கலாம்!

இதற்குள் பாலயோகி கிருஷ்ணாவதாரமே எடுத்துவிட்டார் என்பதை அவ்வப்போது யாராவது சொல்லக் கேட்க நேரும்போது ஆச்சர்யமாக இருக்கும். அட எழுத வருகிறது என்பதற்காகக் குடிப்பதைப்பற்றி நாவல் எழுதியதற்கு பதிலாக யோகம் பயின்று மானுடம் உய்யவாவது எதையாவது எழுதிக்கொடுத்திருக்கலாமே என்று வருத்தமாகவும் இருக்கும். ஏனென்றால் முன்னேறாதவர்கள் சுயமுன்னேற்றத்திலும் முன்னேறியவர்கள் ஆன்மிகத்திலும் மட்டுமே நாட்டம் செலுத்தும் யுகம் இது. இதில் இலக்கியவாதிக்கு என்ன வேலை இருக்கிறது!

பாலயோகி பெரும் விஐபிகளைக் கவர ஆரம்பித்திருந்தபோது எழுத்தாளர் சாருநிவேதிதா அவரைப்பற்றி பேச ஆரம்பத்ததைத் கேட்டேன். சாருவிற்கு ஷீரடி சாய்பாபாவின் மீது நம்பிக்கையும் பக்தியும் வந்ததைப் பற்றி தன் பைபாஸ் சர்ஜரி காலத்தை நினைவுகூர்ந்து அவர் எழுதியிருப்பவையும் என்னிடம் நேரிலேயே சொன்னவையும் எனக்கு நன்றாகவே நினைவிருக்கின்றன. இறந்தவர்களை நேரில் பார்க்கவோ தெய்வத்தின் அருகாமையை உணரவோ எல்லோருக்குமா வாய்க்கிறது! சாரு அதை உணர்ந்ததாக சொன்னபோது என்னால் நம்பாமலும் இருக்க முடியவில்லை, நம்பவும் முடியவில்லை. ஏனென்றால் அவர் பொய் பேசுவதில்லை. தனக்கு சரி என்று பட்டதை மற்றவர்களிடம் அவர் சொல்லும்போது அவர்கள் அதை புருடா என்று நினைத்துவிடுவது வழக்கமாக இருக்கிறது. ஏனென்றால் அவர் சொல்கிற விஷயங்கள் சாமான்யர்கள் அனுபவித்திராதவையாக இருக்கும். இந்தக் குறிப்பிட்ட நடிகையை முத்தமிட எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்று அவர் சொன்னால் அந்த நடிகையை முத்தமிட விரும்பும் அத்தனை பேரும் அவர் பொய் சொல்கிறார் என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள். இதே அடிப்படையில்தான் கடவுளை உணர்வதும் கவனிக்கப்படவேண்டியதாகிறது.

ஆனாலும் தானாக உணராமல் என்னால் எதையும் நம்ப முடிவதில்லை. இந்த ஒரு காரணத்தால் மட்டுமே எனக்கு atheist என்கிற பதம் பொருந்திப்போகலாம். ஆனால் நான் ஒரு உண்மையான ஆன்மிகவாதி என்பதே உண்மை. ஆன்மிகத்தையும் மதத்தையும் கலந்து பார்க்கிற சமூகத்திலிருந்து நான் எப்போதோ விலகிவிட்ட காரணத்தால் இதை உரத்துச் சொல்ல முடிகிறது.

தெய்வத்தை உணரவேண்டுமானால் மதங்களின் வேதங்களை வாசிப்பது முதல் படியாக மட்டுமே இருக்க முடியும். அவை தெய்வத்துக்கும் உங்களுக்கும் இடையே எழுப்பப்பட்டிருக்கும் சுவர்களேயன்றி வேறல்ல. அவற்றின் மீது ஏறியும் அப்பால் குதிக்கலாம். அவற்றின் இருப்பைப் புறக்கணிப்பதன் வாயிலாகவும் அவை தானே நகர்ந்து செல்வதை உணரலாம். எப்படி வந்து சேர்ந்தாலும் சேருமிடம் ஒன்றுதான். அது வெற்றிடம். வெளி. உள்ளேயிருக்கிற வெளியை வெளியேயிருக்கும் வெளியோடு ஐக்கியமாக்கிவிட முடிகிற சூத்திரங்களைப் பயின்ற எத்தனையோ தவஞானிகளை இந்த உலகம் பார்த்திருக்கிறது. இதனால் என்னால் செய்ய முடியாதபோதும் ஒரு தவஞானி தன்னுள் சேர்த்து வைத்திருக்கும் சக்தியைப் பார்த்து நான் மயங்குகிறேன்.

இம்மாதிரியான மயக்கங்கள் பல நிலைப்படுகின்றன. சாருநிவேதிதா தன் வாழ்வின் நுண்ணிய பொழுதொன்றில் வேறொரு ஞானியிடம் பெற்ற நம்பிக்கையை இந்த பாலயோகி சுலபமாகக் கவர்ந்துவிட்டார் என்பதாகவே இந்த விஷயத்தில் எனக்குத் தோன்றுகிறது. இதனாலேயே சாரு அவரைப்பற்றி பெரிதும் புகழ்ந்து தள்ளுவது தவிர்க்க இயலாததாக இருந்திருக்கலாம். ஆனால் உண்மையான நம்பிக்கை உள்ள ஒருவனின் நம்பிக்கை பொய்த்துப்போகும்போது அவநம்பிக்கை வெள்ளத்தையும் ஒருவர் எதிர்கொண்டேயாகவேண்டும். அதிகமாகவே பாலயோகியை நம்பிய காரணத்தாலேயே அவரைப் பற்றிய அவநம்பிக்கையும் பேரதிகமாகவே பிரவகிக்கிறது. இதை உணராமல் இணையத்தில் பலரும் சாருவை நையாண்டி செய்துகொண்டிருப்பதைப் பார்த்து எனக்கு வருத்தமாக இருக்கிறது. இப்படித்தான் ஜெயமோகனை இந்துத்துவா என்று சிலகாலம் பலரும் குற்றஞ்சாட்டிக்கொண்டிருந்தார்கள். இதனால் அவர் இந்துத்துவாவுக்கு எதிராக ஏதாவது எழுதட்டுமே என்பது உள்நோக்கமாக இருந்திருக்கலாம்.

சரி, பாலயோகிக்கும் ப்ரானிக் ஹீலிங்குக்கும் திரும்பவும் வருவோம். தற்போது ஸ்ரீகிருஷ்ணனாக பாவிக்கப்படும் பாலயோகியான நித்யானந்தரை பலரும் தூற்றவும் போற்றவும் அங்கதம் செய்யவுமாக இருக்கும் ஒரு நிலையில்; அரசும் தன் சனநாயக வழக்கப்படி அவருக்கு ஆதரவு எவ்வளவு இருக்கிறது எதிர்ப்பு எவ்வளவு இருக்கிறது என்கிற கணக்கீட்டில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில்; பின்லேடன் போல நித்யானந்தர் எங்கிருந்தோ வீடியோக்களை அனுப்பிக்கொண்டிருக்கும் சூழலில் இதை எழுதுகிறேன்.

கட்டுரையின் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட துன்பருக்கும் நித்யானந்தருக்கும் உள்ள முக்கியமான தொடர்பு ப்ரானிக் ஹீலிங் எனும் வைத்திய முறைதான். வாழ்வில் எந்த ஒழுக்கங்களும் இல்லாமல் இஷ்டப்படி வாழ்ந்து, மத்திய சர்க்கார் உத்தியோகத்தில் ரயிலில் அலைந்து, வீயாரெஸ் வாங்கி அதன்பிறகு ஓஷோவின் ஆசிரமத்துக்குப் போய்ப் பார்க்கலாமா என்று ஆரம்பித்து ப்ரானிக் ஹீலிங் எனும் ரெய்கி எனும் உடலின் சக்தியைப் பெருக்கி அதன் வாயிலாக நோய்களைத் தீர்க்கும் உடற்புள்ளிகளைத் தீண்டும் கலையைக் கற்க முயன்று தோற்ற ஒரு துன்பராலேயே தன் உடலிலிருந்து மற்றவர் உடலுக்குள் உணரக்கூடிய வகையில் ஓர் எனர்ஜியை செலுத்த முடியும் என்பது உண்மையானால், நித்யானந்தர் போன்ற பால யோகியின் உடலில் எவ்வளவு எனர்ஜி இருக்கக்கூடும்! அந்த எனர்ஜியைக்கொண்டு அவர் ஒரு ப்ரானிக் ஹீலராக வைத்தியம் மட்டும் பார்த்துக்கொண்டிருந்தால் அவர் ரஞ்சிதாவோடு கொஞ்சினால் என்ன, அஞ்சிதாவோடு துஞ்சினால் என்ன! யாரால் கேள்வி கேட்க முடியும்?

அதோடு இந்தப் பிரச்சனையை எதிர்ப்பவர்கள் அனைவரையும் ஒரு அடைப்புக்குள்ளும், ஆதரிப்பவர்கள் அனைவரையும் ஒரு அடைப்புக்குள்ளும் வைத்து மயங்குவதே பொதுவான குழப்பத்துக்கான மூலம். ஒரு மகானிடம் ஒரு சீடன் பெறும் அனுபவமும் ஒரு பக்தன் பெறும் அனுபவமும் முற்றிலும் வேறானவை. அதேபோலத்தான் ஒரு சீடன் எதிர்கொள்ளும் வெறுப்பும் ஒரு பக்தன் எதிர்கொள்ளும் வெறுப்பும் சமம் என்று கருதுவதும் முட்டாள்தனமாகவே ஆகமுடியும்.

இருந்தாலும் வைத்தியரை கடவுள் என்று கொண்டாடும் சமூகம் அவர் ஓர் ஆன்மிக மகானாகவும் தென்பட்டால் அவரை தேவாதிதேவன் என்று போற்றுவது இயல்பானதே. அந்த இயல்புதான் இந்தப் பிரச்சனையின் உண்மையான பிரச்சனை.

இதில் நித்யானந்தாவின் நியாயம் என்ன?

வெறும் ப்ரானிக் ஹீலராக மட்டுமே இருந்திருந்தால் அவரால் இத்தனை உயரத்துக்குப் போயிருக்க முடியுமா? ஆன்மிகம் கொடுத்த செல்வத்தை அவருக்கு வைத்தியம் கொடுத்திருக்குமா? (நல்லகாலம், இந்த வருடத்தைய உலகப் பணக்காரர்களின் பட்டியலில் அவர் பெயர் இல்லை).

அதோடு ப்ரானிக் ஹீலிங் என்கிற வைத்திய முறையை இந்திய அரசு அங்கீகரித்துவிட்டதா என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். இத்தனை பெரிய கோபுரத்தை ஒருவரால் ஒரு வைத்தியமுறையை வைத்துக்கொண்டு எழுப்ப முடியும் என்றால் அதன் பலன் என்ன என்பதை ஆராயவேண்டும் என்கிற எண்ணம் ஏன் இந்திய அரசுக்கு எழாமலே போகிறது? எதற்கெடுத்தாலும் அலோபதி என்கிற ஆங்கில மருத்துவமுறையின் கொடியையே உயரப் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கும் இந்திய அரசு இந்த நேரத்திலாவது உறக்கம் கலைய வேண்டும். ப்ரானிக் ஹீலிங் போலவே எத்தனையோ மருத்துவ முறைகள் உலகெங்கிலும் பல அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டு மக்களுக்குப் பயனளிப்பவையாக இருக்கின்றன. சீனாவில் அக்குபங்சர் வைத்தியமே பிரதானமானது என்பதைப் போலவே இந்தியாவிலும்கூட கேரளாவில் இப்போதும் ஆயுர்வேதத்திற்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.

ஏன் இதுமாதிரி சாமியார்கள் இம்மாதிரி நடந்துகொள்கிறார்கள் என்பதன் பின்னணியில் இந்தப் பார்வையும் முக்கியமானது என்பதே எனது பார்வை. ஆங்கில மருத்துவத்துக்கான அங்கீகாரத்தை ஒரு தலைமுறைக்கு ரத்து செய்து பாருங்கள், எத்தனை எம்பிபியெஸ்கள் சாமியார்களாக ஆகிறார்கள் என்பது தெரியும்!

வாழும் மனிதர்களை அவர்கள் நோயைப் போக்குகிறார்கள், ஆன்மிகத் தெளிவு வழங்குகிறார்கள், ஆத்ம அமைதியை அருளுகிறார்கள், சம்பத்தைப் பெருக்கித் தருகிறார்கள் என்கிற காரணங்களுக்காக தெய்வங்களாகப் போற்றுகிற சமூகம் இருக்கிறவரை இந்தக் குழப்பங்கள் எல்லாம் தவிர்க்க இயலாதவையே!

Read more...

விளக்கணைச்ச நேரத்திலே…

புவி வெப்பமாகவும் கூடாது, குளிர்ந்துவிடவும்கூடாது என்றால் நம்மால் என்னதான் செய்ய முடியும்? நல்ல லட்டு மாதிரியான பீரியடையெல்லாம் நம் முன்னோர்கள் வாழ்ந்துவிட்டுப் போய்விட்டார்கள். அவர்களைப் பொருத்தவரைக்கும் எந்தக் குழப்பமுமில்லாமல் பகலென்றால் வெளிச்சமாகவும் இரவென்றால் இருட்டாகவும் இருந்து வந்தது. நிம்மதியாக இருந்தார்கள். உன் செய்கையால் பூமியின் ஆதாரக் கட்டமைப்பே பாதிக்கப்படுகிறது என்று ஒரு குரங்கையோ முதலையையோ எப்படி குற்றஞ்சாட்ட முடியாதோ அதே மாதிரிதான் இந்த முன்னோர்களையும் நம்மால் கடிந்துகொள்ள இயலாது. ஏனென்றால் அவர்களுக்கு இப்படியெல்லாம் சில பிரச்சனைகள் வரப்போகின்றன என்பது தெரியாது.

இவர்களில், கிடைத்த பெண்களையெல்லாம் ஆண்களும் கிடைத்த ஆண்களையெல்லாம் பெண்களும் புணர்ந்துகொண்டு, குடும்பம் என்கிற கட்டமைப்புக்குள்கூட வராத நிலையில் இருந்தவர்களைப் பார்த்து இன்னும்கூட நான் பொறாமைப்படுகிறேன். புணர்ச்சி, ஆகாரத் தேட்டம், வேட்டையாடல், விளையாடல் ஆகியவற்றால் உலகம் உயிர்த்திருந்ததே தவிர அழிந்துபடவில்லை.

இந்த அற்புதங்களையெல்லாம் விட்டுவிட்டு பகலில் இருளும் இரவில் வெளிச்சமும் வேண்டும் என்று எப்போது மனிதன் யோசிக்க ஆரம்பித்தானோ அப்போதே முளைத்துவிட்டது பிரச்சனை. மனிதனுக்கல்ல, பூமிக்கு. ஏனென்றால் இயல்பை மீறுவது பூமிக்குப் பிடிக்காது. என் அந்தரங்கத்தை யாராவது தோண்டிப் பார்க்க முனைந்தால் எனக்கே பிடிக்காது என்கிறபோது, அகழ்வாரைத் தாங்கும் நன்னிலம் ஏன் பொங்கியெழக்கூடாது? இதன்வாயிலாக நாம் புரிந்துகொள்ள வேண்டியது ஒன்றுதான், நிற்பன, நடப்பன, பறப்பன, ஊர்வன யாவும் நிலத்தன. மனிதகுலம் எனும் கனவில் மிதப்பனதான் நிலத்தைக் கெடுத்தன.

ஒவர் தமிழால் நீங்கள் சோர்வடைந்திருக்கலாம் அல்லது சிலிர்ப்படைந்திருக்கலாம், போரடிக்காமல் விஷயத்துக்கு வருகிறேன், மார்ச் 28 புவி வெப்பமடைவதையெதிர்த்து புத்தியும் ஹ்ருதயமும் உள்ள மனிதர்களைத் திரட்ட உலகளாவிய முனைப்பு செயல்படும் தினம் என்பதாக கடந்த வருடமே ஓர் அறிவிப்பை எதிர்கொண்டேன். அதன்படி அந்த நாளில் இரவு எட்டரை மணியிலிருந்து ஒன்பதரை மணி வரைக்கும் எர்த் அவர் என்பதாக அறிவிக்கப்பட்டு, அந்த நேரத்தில் அத்தியாவசியமல்லாத சுவிட்சுகளை அணைக்கவேண்டும் என்பது கட்டளையல்ல, கோரிக்கை. கடந்த வருடம் கலைஞர் கருணாநிதியின் தலைமையில் தள்ளாடும் அல்லது பட்டையைக் கிளப்பும் தமிழகம் எனும் நிலப்பிரதேசம் அதில் கலந்துகொள்ளவில்லை. ஏனென்றால் இந்தமாதிரி மின்னணைப்பு வைபவம் எல்லாம், மின்சாரத்தை ஒருபோதும் அணைக்காத போதமுள்ள தேசங்களுக்கு மாத்திரமே வெல்லமாக இருக்க முடியுமே தவிர, கலைஞரின் விக்டிமாக விடிந்திருக்கிற ஆற்காடார் தலைமையில் வீக்கான வோல்ட்டேஜில் மின்வெட்டும் நள்ளிரவு கும்மிருட்டும் துள்ளிவிளையாடும் தமிழ்த்தேயம் போன்ற ஏரியாக்களில் வெறும் விளையாட்டாகவே ஏற்றுக்கொள்ளப்பட முடியும்.

ஆனாலும் ஆஸ்திரேலியக் கண்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கம் எப்படியோ கடலில் விழுந்து நீந்தியோ, ஃபேக்ஸ் மெஷினில் புகுந்து புறப்பட்டோ, ஊடகத்தால்தான் ஊடுருவியோ இங்கே வரைக்கும் வந்துவிட்டது. போன வருஷமே இந்தியத் துணைக்கண்டத்தின் வட இந்திய நகரங்களில் இந்த அனுசரிப்பு நிகழவே செய்தது. இந்த வருடம் அதைத் தமிழ் கூறும் நல்லுலகும் ஏற்றுக்கொண்டுவிட்டது. ஆக, ஒவ்வொரு இந்தியனின் தலையிலும் சுமத்தப்படும் உலக வங்கிக் கடன் போல வருடம் ஒருநாள் ஒரு மணிநேரம் அவர்களாக நிறுத்தாமல் நாமாக மின்சாரத்தை நிறுத்த ஒரு நல்வாய்ப்பு நமக்கு வழங்கப்பட்டது. இது கிட்டத்தட்ட ஈபி எனப்படும் எலக்ட்ரிசிடி போர்டு இயக்குனர் பதவிக்கு ஒப்பானது என்பதனால் இதை நாம் அனுசரிக்க வேண்டிய கட்டாயத்தை நாமும் உணர்ந்துகொண்டோம்.

அவர்கள் குறிப்பிட்டிருந்த நேரத்தில் கலைஞர் கருணாநிதியின் வீட்டில் இருள் சூழ்ந்திருந்ததை அடுத்தநாள் நாம் ஊடகம் வாயிலாகப் பார்த்தோம். ஒருமணிநேரம் கவிதை அல்லது கழகக் கண்மணிகளுக்கான கடிதம் எழுத முடியாத நிலைமையில் அவர் தள்ளப்பட்டது தமிழுக்கு நல்லது என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்களும், அது தமிழே ஸ்தம்பித்த ஒரு மணிநேரம் என்பதாக அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்களும் கருதும்படியாக ஆகிவிட்டது. அதாவது புவிக்கு ஒன்றேல் இரட்டை லாபம், அன்றேல் இரட்டை நட்டம்.

அவர் வீடு மாத்திரமல்ல, பாராளுமன்றம், இந்தியா கேட் என்று தொடங்கி நாடெங்கும் பல்வேறு இடங்களில் விளக்ணைந்ததை விமரிசையாக ஊடகங்கள் காட்டின. இதனால் நாம்தான் விளக்கணைக்காமல் விட்டுவிட்டோமோ என்று பலரும் வருந்தநேரும் என்பதாக அவர்கள் எண்ணமிட்டிருக்கலாம். அடுத்த வருடம் இதற்கான பர்ஸன்டேஜை உயர்த்த இந்த உள்மனக் கிலேசம் உதவக்கூடும் என்பதும் உண்மையாக இருக்கலாம். ஆனால் அதைப்பற்றி எனக்கு அக்கறையில்லை. ஏனென்றால் அயாம் நாட் கில்ட்டி.

அதாகப்பட்டது, ஒழுங்கு மரியாதையாக அந்த நேரத்தில் விளக்கணைத்த புவி விரும்பிகளில் நானும் ஒருவன். சாதாரணமாக இந்தமாதிரி விஷயங்கள் எல்லாம் கட்டாயமாக்கப்பட்டால் அதை எதிர்க்கிற முனைப்பில் திரிகிற பழக்கம் உள்ளவன் என்பதால், அரசாங்கம் கட்டளையிடாமல் கோரிக்கை வைக்கும்போது அதை ஒழுகவேண்டியது கடமை என்பதாக நான் அதை அனுசரித்தேனா, உண்மையிலேயே உலகம் வெப்பமயமாவதை என்னாலான அளவு தடுக்கப்போகிற முனைப்பை உடையவனா நான் என்பதையெல்லாம் நீங்கள்தான் சொல்ல வேண்டும். நான் நடந்ததை மட்டும் சொல்கிறேன். (உதாரணமாக இதற்கு அடுத்தநாள் மஹாவீர் ஜெயந்தி என்பதால் புலாலும் மதுவும் விற்பதற்கு தடை இருந்த காரணத்தால் கனஜரூராய்க் கிளம்பிப்போய் ரகசியமாக இரண்டையும் வாங்கி வந்து சமைத்து உண்ணவும் கலந்து அருந்தவுமாய் இருந்தவன்தான் இதை எழுதிக்கொண்டிருப்பவன் என்பதை நீங்கள் மனதிற்கொள்ளலாம்).

சாதாரணமாக இரவு ஒன்பதரையிலிருந்து பத்துக்குள் வாசல் விளக்கை அணைத்துவிட்டு கதவுகளைப் பூட்டுவது வழக்கம் என்பதனால் இந்த எட்டரை டு ஒன்பதரை வைபவத்தை முன்னிட்டு எட்டு இருபதுக்கே அதைச் செய்து விட்டு இரண்டு மெழுகுவர்த்திகளையும் ஹாலில் ஏற்றி வைத்துக்கொள்வது என்பதாக தீர்மானித்திருந்தேன். அதாவது அநாவசியம் என்பதாக தோன்றுகிற அத்தனை சுவிட்சுகளையும் அணைப்பது நோக்கம். அப்படியானால் முதலில் அணைக்க வேண்டியது டீவி. அடுத்தது கம்ப்யூட்டர், மூன்றாவது விளக்குகள். தேவைப்பட்டால் ஃபிரிட்ஜ். வெய்யில் காலம் என்பதால் கடைசியாகத்தான் ஃபேன். இந்த ஆர்டரில் ஒழுங்காக ஒவ்வொன்றாக செய்துகொண்டு வந்தேன். படுக்கையறையில் ஒரு மணிநேரம் முன்பாகவே ஏஸியை ஓடவிட்டுவிட்டு இந்த ஒரு மணிநேரத்தில் அணைத்துவிட்டால் அறை கூலாக இருக்குமே என்று ஓடிய குறுக்கு புத்தியை செருப்பால் அடித்துவிட்டு சரியாக எட்டரைக்கு ஃப்ரிட்ஜ் வரைக்கும் அணைக்கப்பட்டுவிட்டதா என்பதைப் பார்த்துவிட்டு ஒழுங்காக ஹாலில் வந்து சம்பிரதாயமாக தரையில் உட்கார்ந்துகொண்டேன்.

மெழுகுவர்த்தி வெளிச்சமும் அவை அணையாத அளவுக்கு மெதுவாகச் சுழலவிட்ட ஒரே ஒரு ஃபேனும் மாத்திரம். சென்னைக்கு வந்து முதல் கோடை என்பதனால் ஃபேனை அணைக்க மனம் வரவில்லை. அதோடு குடிக்கும்போது ஃபேன்கூட இல்லையானால் வியர்வை பெருக்கெடுக்க ஆரம்பித்துவிடும் என்பதாலும் அதைத் தவிர்க்க இயலவில்லை.

சரியாக சனிக்கிழமை ராத்திரி பார்த்து இப்படியொரு கோரிக்கை வைக்கவேண்டும் என்று தோன்றியிருக்கிறது பாருங்களேன்… மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் குடித்து வெகுநாட்கள் ஆகின்ற காரணத்தால் உண்மையில் ரஸமாகவே இருந்தது. ஆஸ்திரேலியர்களுக்கு இதற்காகவே ஒரு பாராட்டுப் பத்திரம் வாசிக்கலாம். அதோடு தனியாகக் குடிப்பது யாரோடும் பகை நேராமல் இருக்க நல்ல உபாயம் என்பதாலும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், மெல்லிய ஃபேன் காற்றில் மெடிடேஷன் போல ஒரு குடிடேஷன் வைபவம் பிரமாதமாக நடந்தேறியது.

இடையில் காற்று போதாமல் கொஞ்சம் வாங்கலாமே என்று பின் வாசலில் போய் நின்றபோதுதான் எங்கள் ஏரியாவிலேயே இந்த வைபவத்தை அனுசரித்த ஒரே விஐபி நான்தான் என்பது தெரிந்தது. சரி, எல்லோரும் என்னைப்போல தனியாகவா இருக்கிறார்கள்? வீட்டில் ஒருத்தருக்கொருத்தர் மூஞ்சியைப் பார்த்துக்கொள்ள சகிக்காமல்தானே டீவியைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதையும் அணை என்றால் எப்படி? உண்மையில் இம்மாதிரி விளக்ணைக்க நேரும்போது வீட்டிலுள்ள சக மனிதர்களோடு பேச ஆரம்பிக்க முடிகிறது என்பதையே பலரும் வலியுறுத்திவருகையில் தனியர்களைவிடவும் குடும்பங்களே இதை கண்டிப்பாக அனுசரிக்கவேண்டிய அவசியம் கோரப்படவே செய்கிறது. யார் காதில் விழுகிறது…

இரண்டொரு நண்பர்களுக்கு ஃபோன் செய்து பார்த்தபோதும் ஐபியெல் பார்த்துக்கொண்டோ சீரியல் பார்த்துக்கொண்டே இருந்தார்கள் என்பதுதான் தெரியவந்தது. அவர்கள் என்னிடம் கேட்டதெல்லாம் இப்படியொரு அறிவிப்பு வந்ததா? அது எப்போது வந்தது? என்பதுதான். இன்னொருவர் கேட்டார், ஆமாம் எங்கோ படித்தேன். அது என்றைக்கு? என்று. ஒன்றேல் இந்த எட்டரை டு ஒன்பதரை விஷயம் ஊடகங்களால் சரிவர பரப்பப்படவில்லை (அதாவது நமீதா போன்ற நவநாயகியர் கையில் தீப்பந்தத்தை ஏந்தியவாறு குதித்து குதித்து ஓடிவந்து மெúஸஜ் சொல்லவில்லை). அன்றேல் அதைக் கேட்டதாய்க் காட்டிக்கொள்வதையே அசிங்கமான கனவு கண்டதைப்போல தங்களுக்குள் மறைத்துக்கொள்வதை பலரும் விரும்பியிருக்க வேண்டும்.

இவற்றில் எது உண்மை என்று உங்களைக் கேட்டால் உங்கள் உள்மனம் வெறொன்றை முன்வைக்கக்கூடும். புவி வெப்பமயமாதலைக் குறித்த விழிப்புணர்வோ அக்கறையோ எனக்குத் தேவையில்லை என்பதே அது. ஏனென்றால் உங்களைப் பொருத்தவரைக்கும் அதெல்லாம் ஆங்கிலப் படங்களுக்கு திரைக்கதை எழுதுபவர்களின் தந்திரம் மாத்திரமே.

சரியாக ஒன்பதரைக்கு அவசியமான சுவிட்சுகளைப் போட்டுவிட்டு, ஆகாரத்தைப் பிட்டுப் போட்டுக்கொண்டு கொஞ்சநேரம் எச்பீயோவைப் பார்ப்பதற்குள் சரக்கு உறக்கத்திற்கு மணியடித்துவிட்டதால் டீவியையும் விளக்குகளையும் அணைத்துவிட்டு இன்றைக்கு நான்கூட மின்சாரத்தை சேமித்து இந்த பூமிக்கு என்னாலான நல்லுதவியை ஆற்றியிருக்கிறேன் என்கிற சந்தோஷத்தோடு படுக்கையறைக்குப் போனேன்.

இதோடு இந்தக் கட்டுரையை முடிக்க நேர்ந்திருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும். என்ன செய்வது, அடுத்த நாள் காலையில்தானே ஹாலில் சுழலவிட்டிருந்த ஃபேனை மப்பில் அணைக்க மறந்திருந்தது தெரிந்து தொலைத்தது.

Read more...

கூடாரத்தில் ஒரு ஆங்கிலேய அழகி


 
ஜீலு நாட்டில் மாவீரன் ஒருவன் இருந்தான். அவன் அந்த நாட்டு மன்னனிடம் சென்று அவனது மகளைத் தனக்கு திருமணம் செய்து தருமாறு கேட்டான்.


" நான் இடுகின்ற மூன்று கட்டளைகளை அணுவளவும் பிசகாது எவன் ஒருவன் செய்கிறானோ, அவனுக்கே என் மகளைத் திருமணம் செய்து தருவேன்" என்று அந்த மன்னன் அவனுக்கு பதில் அளித்தான்.

" அந்த முன்று கட்டாளைகள் என்னென? சொல்லுங்கள் மன்னவா! உடனே அவற்றை நிறைவேற்றி வைக்கிறேன்!" என்றான் அந்த மாவீரன்.

" நான் முன்று கூடாரங்களை ஏற்ப்டுத்தி வைத்திருக்கிறேன், முதல் கூடாரத்தில் பெரியதொரு சாராயப் பீப்பாய் இருக்கிறது. அதில் உள்ள சாராயம் முழுவதையும் ஒரே மூச்சில் குடித்து முடித்துவிட வேண்டும் "

" இந்தக் காரியத்தை முடித்த கையோடு உடனே இரண்டாவது கூடாரத்திற்க்குச் செல்ல வேண்டும் அங்கே பல்வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் பைத்தியம் பிடித்த மனிதக் குரங்கு ஒன்று இருக்கும். ஏழு அடி உயரம் உள்ள அந்த மனிதக் குரங்கிற்க்கு தொல்லை தரும் பல் எது என்பதைக் கண்டுபிடித்து , அந்த பல்லை வெறுமனெ கையினாலேயே பிடுங்கி எறிய வேண்டும்."

இந்த வேலை முடிந்தவுடன் சிறிதும் தாமதியாது மூன்றாவது கூடாரத்திற்க்கு செல்லவேண்டும். அங்கே ஒரு ஆங்கிலேயப் பெண் இருப்பாள். எந்த ஒரு ஆண்மனும் அவளை உடலுறவில் முழுதும் திருப்தி செய்ய முடியாதபடி ஒரு தனிப் பயிற்சி பெற்றவளாக இருப்பாள். அவளோடு உடலுறவு கோண்டு அவளை முழுவதும் திருப்தி செய்ய வேண்டும் " என்றான் மன்னன்

" இது எனக்கு சாதாரணம் இப்போதே இதை செய்கிறேன்" என கூறிவிட்டு அந்த மாவீரன் முதல் கூடாரத்தினுள் நுழைந்தான். ஒரே மூச்சில் பீப்பாய் சாராயத்தையும் காலி செய்தான்.

பின்னர் பைத்தியம் பிடித்த மனிதக் குரங்கு இருக்கும் கூடாரத்தினுள் தடுமாறியபடி நுழைந்தான்.

அங்கே அவனுக்கும் அந்தக் மனிதக் குரங்குக்கும் ஒரு பயங்கரமான் சண்டை நடந்து. அந்த சண்டையில் அந்த கூடாரமே ஆட்டம் கண்டது. வேதனைக் கூக்குரல் விண்ணைப் பிளந்துது.அந்தக் மனிதக் குரங்கின் உடம்பின் மேலுள்ள முடிக்கற்றைகள் பறந்து வந்து வெளியே விழுந்தன.மனிதக் காது ஒன்றுகூட வெளியில் வந்து விழுந்து.
இந்த கூச்சலும் கூக்குரலும் சுமார் அரை மணி நேரம் நீடித்தது. சற்று அமைதி, பின் அந்தக் கூடாரத்திலிருந்து மாவீரன் தவழ்ந்து கொண்டே வெளியே வந்தான்.

தள்ளாடிக் கொண்டே எழுந்து நின்று அந்த மன்னனைப் பார்த்துக் கேட்டான்.

" சரி அரசே! இப்போது பல்வலியால் அவதிப்படும் அந்த ஆங்கிலேயப் பெண்மனி இருக்கும் இடத்தைக் காட்டுகிறீர்களா ?"
 
-ஓஷோ

Read more...

நானும் ஒரு விபச்சாரி

 
ஒரு முறை நடைபாதையில் லைசென்ஸ் இல்லாமல் நடை பாதையில் வியாபாரம் செய்ததற்க்காக முல்லா மாட்டிக்கொண்டார்-அவ்ர் அந்த ஊருக்கு புதிது அதனால் அங்கு நடைபாதையில் வியாபாரம் செய்ய உரிமம் தேவை என்பது தெரியாது.

அவர் நீதி மன்றத்திற்க்கு அழைத்து வரப்பட்டார்- அங்கு நீதிபதி முன் மூன்று பெண்களும் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் உரிமம் இல்லாமல் விபச்சாரம் செய்ததல் கைது செய்து செய்யப்பட்டிருந்தனர். அந்த ஊரில் விபசாரம் செய்யவும் உரிமம் வழங்கப்படுகிறது-அவர்கள் அத்தகைய உரிமம் இல்லாததால் மாட்டிக்கொண்டனர்.

நீதிபதி முதல் பெண்ணிடம் கேட்டார் " நீ யார் ,என்ன செய்து கொண்டிருந்தாய் ? இந்த குற்றத்தை ஒப்புக்கொள்கிறாயா ?"

முதல் பெண் " நான் ஒரு மாடல் , என்னை தவறாக கைது செய்துவிட்டனர்" என்று பொய் சொன்னாள்.

நிதிபதி " 30 நாள் கடும் காவல் தண்டனை " என்று சொல்லிவிட்டு இரண்டாம் பெண்ணை பார்த்து இதே கேள்விகளை கேட்டார்

இரண்டாம் பெண் " நான் ஒரு நடிகை! இதற்க்கும் சிறிதளவும் சம்மந்தமில்லை " எனச் சொன்னாள் ( பொய்தான் ) நீதிபதி " உனக்கு 60 நாள் கடும் காவல் தண்டனை " என்று சொல்லிவிட்டு முன்றாம் பெண்ணை பார்த்து இதே கேள்விகளை கேட்டார்

முன்றாம் பெண் " ஐயா ! நான் ஒரு விபச்சாரி , உரிமம் பற்றி எனக்கு தெரியாது , எனக்கு வேறு தொழிலும் தெரியாது ! " எனச்சொன்னாள்

இதைக் கேட்ட நீதிபதி " நான் உன்னை பாராட்டுகிறேன் தண்டனை கிடைக்கும் எனத்தெரிந்தும் உண்மையை சொன்னதற்க்காக! நான் உண்னை விடுதலை செய்கிறேன் அதுமட்டுமல்ல உனக்கு உரிமம் வழங்கவும் உத்திரவிடுகிறேன்! " எனதீர்ப்பு கூறினார்

இப்போது முல்லாவின் முறை, நீதிபதி தனது வழக்கமான கேள்விகளை முல்லாவிடம் கேட்டார் அதற்க்கு முல்லா" ஐயா ! நானும் ஒரு விபச்சாரி , உரிமம் பற்றி எனக்கு தெரியாது , எனக்கு வேறு தொழிலும் தெரியாது ! " எனச்சொன்னார்

தழுவல் : ஓஷோ

Read more...

என் ஆசை தீர உன்னை அனுபவிப்பேன்...?

 

முல்லா தான் மிகவும் குண்டாக இருப்பதை நினைத்து மிகுந்த வருத்தத்தில் இருந்தார், அப்போது நாளிதழில் வந்த ஒரு (கீழ்க்கண்ட) விளம்பரம் கண்ணை கவர்ந்தது

மிகவும் கவர்ச்சிகரமான முறையில் உடம்பு இளைக்க ஒரு வாய்ப்பு !

1)
உடல் இளைக்க (சாதாரணம்) – Rs 1,000/- ஒரு மணி நேரம் ( 2 முதல் 5 கிலோ வரை )
2)
சூப்பர் ட்ரிம்மர் - Rs 2,000/- இரண்டு மணி நேரம் ( 6 முதல் 10 கிலோ வரை )
3)
ஹெவி ட்ரிம்மர் - Rs 3,000/- மூன்று மணி நேரம்( 11 முதல் 15 கிலோ வரை )
4)
அல்டிமேட் ட்ரிம்மர் - Rs 10,000/- கால வரையரை இல்லை ( எடை வரையரை இல்லை )

முன்பதிவிற்கு முந்துங்கள்...

முல்லா இந்த விளம்பரத்தைப் பார்த்ததும் அதை முயற்சி செய்து பார்த்துவிடுவது என முடிவெடுத்தார். ஆனாலும், சாதாரண முறையில் முதலில் பரீட்சிக்க விரும்பி அதற்க்கான பணத்தை கட்டினார். அவர் ஒரு காலியான அறையில் விடப்பட்டார். அந்த அறை பதினாறுக்கு பதினாறு என்ற அளவில் இருந்தது. அதன் மூலையில் ஒரு பெண் அமர்ந்திருந்தார் அவளுடைய கையில் ஒரு அட்டை அதில் " ஒரு மணி நேரத்திற்க்குள் என்னை துரத்திப் பிடித்தால் என்னுடன் ஜாலியாக இருக்கலாம்" என்று எழுதியிருந்தது, முல்லா அந்த பெண்னை துரத்த ஆரம்பித்தார்–அவருக்கு எல்லாம் நல்ல படியாகவே முடிந்தது–அவர் துரத்திய துரத்தலில் அவருடைய எடையும் கனிசமாக குறைந்தது..

முழு திருப்தியுடன் அதற்க்கு அடுத்த முறையை பரிச்சிக்க விரும்பினார் இந்த முறையில் கொஞ்சம் வித்தியாசம். அறையின் அளவு நாற்பதுக்கு நாற்பது, சாதாரண முறையைவிட நல்ல அழகான பெண், கால அவகாசம் இரண்டு மணி நேரம் அவ்வளவுதான், மற்றபடி, முறை ஒன்றுதான். இதிலும் முல்லாவிற்கு முழுதிருப்தி.

மிகவும் மகிழ்ச்சியுடன் அடுத்த முறையை தேர்ந்தெடுத்தார் இதிலும் கொஞ்சம் வித்தியாசம். அறையின் அளவு எழுபத்தைந்துக்கு எழுபத்தைந்து, மிக மிக அழகான பெண், கால அவகாசம் மூன்று மணி நேரம். முல்லா கணிசமாக எடை குறைந்திருந்தார். அவருக்கு, எல்லா முறைகளிலும் தான் சிறப்பாக செய்ததை எண்ணி அளவில்லா ஆனந்தம், கடைசியாக? அல்டிமேட் ட்ரிம்மர் முறையிலும் கலந்து கொள்வது என்று முடிவெடுத்தார், அதற்க்கான பணத்தையும் கட்டினார்.

வரவேர்ப்பாளர் அவரிடம் பதினாறாவது மாடிக்கு நடந்து செல்லும் படி சொன்னார், முல்லாவும் தான் அடையப்போகும் சந்தோஷத்தை எண்ணியவரே கஷ்டப்பட்டு பதினாறாவது மாடியை அடைந்தார். அங்கு அவர் நார்ப்பத்திரண்டாவது மாடிக்கு பதினைந்து நிமிடத்திற்குள் ஓடி வந்து சேர வேண்டும். அப்படி வந்தால் தான் பயிற்சி உண்டு என தெரிவிக்கப்பட்டது, முல்லாவிற்கு வேறு வழியும் இல்லை, தான் காணப்போகும் மிக மிக அற்புதமான அனுபவத்தை நினைத்தவாறு உயிரைக் கொடுத்து ஓடி மாடியை 13 நிமிடத்தில் அடைந்தார். அது மிகப்பரந்த ஒரு மொட்டை மாடி அதன் அளவு சுமார் 500X500 அடி பரப்பளவு இருக்கும், அதன் மூலையில் ஒரு பெரிய அறை அவ்வளவுதான். அவர் மொட்டை மாடியை அடைந்ததும் அவருக்குப்பின் கதவு மூடப்பட்டது, முல்லா மூச்சு வாங்கியவாரே அந்த அறையை நோக்கி நடந்தார் அங்கே! " நான் உன்னை துரத்திப் பிடித்தால், என் ஆசை தீர உன்னை அனுபவிப்பேன் " என்ற வாசகம் எழுதிய அட்டையுடன் அமைதியாக ஒரு பெரிய மனிதக்குரங்கு அமர்ந்திருந்தது.

-
ஓஷோ

Read more...

நான் ஒரு கெட்ட பெண்மணி

 
ஒரு பெண் ஒரு கிளியை விலைக்கு வாங்கினாள். ஆனால் பிறகு மிகவும் கவலைப்பட்டாள் . அதற்க்காக அவள் நல்ல விலை கொடுத்திருந்தாள். கிளி அழகாக இருந்தது. ஆனால் அது பேசும் ஒரு விஷயம் ஆபத்தாக இருந்தது.

அடிக்கடி அந்த கிளி உரக்க, " நான் ஒரு கெட்ட பெண்மணி" என்று கூறியது. இதில் ஏதோ விஷயம் இருக்கிறது . அந்தப் பெண் தனியாக வாழ்பவள். மிகவும் மதப்பற்றுள்ளவள். இல்லை யென்றால் ஏன் தனியாக வாழவேண்டும்? அவள் மிகவும் கடுகடுப்பான பெண்.

இந்த கிளி மீண்டும் , மீண்டும் ,"நான் மிகவும் கொடுமைக்காரப் பெண்" என்று கூறியது.

அவள் பூசாரியிடம் சென்று " இது மிகவும் மோசமானது. நான் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறேன். கிளி மிகவும் அழகாக இருக்கிறது . எல்லா விஷயங்களும் நன்றாக இருக்கின்றன, இது ஒன்றைத் தவிர" என்று கூறினாள்.

பூசாரி சொன்னார் :

" கவலைப்படாதே. என்னிடம் இரண்டு பக்தியுள்ள கிளிகள் இருக்கின்றன. ஒன்று வழிபாடு செய்யும் ; மற்றொன்று மணியடிக்கும் . நீ உன் கிளியைக் கொண்டு வா, இந்த கிளிகளுடன் கொஞ்ச நாள் உன் கிளியை விட்டுச் செல். நல்ல நட்பு எப்போதும் உதவி செய்யும். பின்னர் உன் கிளியை எடுத்துச் செல்லாம் ! "

அந்த பெண்ணுக்கு இந்த யோசனை மிகவும் பிடித்திருந்தது. அவள் ஒப்புக் கொண்டு கிளியை எடுத்து வந்தாள் . பூசாரி தன் கிளிகளுக்கு அந்த கிளியை அறிமுகப் படுத்தி வைத்தார். ஆனால் அவர்கள் எதுவும் பேசும்முன் அந்தக் கிளி கூறியது . " நான் மிகவும் கொடுமைக்காரப் பெண் ."

பூசாரியும் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தார்.

அப்போது வழிபாடு செய்து கொண்டிருந்த கிளி வழிபாட்டை நிறுத்திவிட்டு அடுத்த கிளியிடம் ," முட்டாளே ! இன்னும் ஏன் மணியாட்டிக் கொண்டிருக்கிறாய் ? நம் பிராத்தனைகள் நிறைவேறி விட்டன " என்று கூறியது . அவை ஒரு பெண்னுக்காகப் பிராத்தனை செய்து வந்திருந்தன

ஓஷோ கூறுகிறார் :

" யாராவது பிரார்த்தனை செய்வதைப் பார்த்தால் ஏதோ தவறு நடக்கிறது என்று உண்மையில் சந்தேகப்படு. அவர்கள் பண்த்துக்காக, பெண்ணுக்காக, மகிழ்ச்சிக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். உண்மையில் மகிழ்ச்சியான மனிதன் பிரார்த்தனை செய்வதில்லை. மகிழ்ச்சிதான் அவன் வழிபாடு , அதைவிட உயர்ந்த சிறந்த வழிபாடு இருக்க முடியாது, "

-ஓஷோ வின் குட்டி கதைகள்

Read more...

இந்தியா வந்த “ஆரிய இனம்”

காலத்துள் புதைந்து கிடைக்கும் உறவுகளும் உண்மைகளும் (1)

 

ஆரிய இனம்

"வானியல் நோக்கில் வள்ளுவராண்டு" என்ற தலைப்பில் தென்மொழி 37-10 இல் வெளிவந்திருக்கும் கட்டுரை படித்தேன். கட்டுரையாளர் தான் திறங்கூறியிருக்கும் இந்திய வரலாற்றில் புராணங்கள், இலக்கியங்கள், வானியல் என்ற நூலையோ குறிப்பிட்ட "தைப்பொங்கலும் தமிழர்களின் வடக்கு நோக்கி நகர்வும்" என்ற கட்டுரையையோ கவனத்துடன் படிக்கவில்லை என்று புரிகிறது.

 

தமிழர்கள், இன்னும் தெளிவாக, குமரிக்கண்ட மக்கள் வானியலை மட்டுமல்ல, மனித நாகரீகத்தின் அடிப்படைத் துறைகள் அனைத்தையும், அளந்து, அறிந்து, தொகுத்து, வகுத்து முழுமைப்படுத்தியவர்கள். ஆனால் அவர்களது பதிவுகள் தமிழ் மொழியில் இன்றி மறைமொழி, சமற்கிருதம் போன்றவற்றில் உள்ளமையால் அவற்றை நாம் கவனிக்கவில்லை.

 

இற்றை ஐரோப்பிய நாகரீக மீட்சியின் போது இந்தியா வந்த ஐரோப்பியர் முதலில் சமற்கிருத மொழியைத் தனித்து ஆய்ந்து "ஆரிய இனம்" என்ற தவறான கோட்பாட்டை உருவாக்கினர். இதில் செருமானியரின் பங்கு பெரிது. நாடு பிடிக்கும் போட்டியில் பிரான்சை வெல்ல அதற்கெதிராக செருமனியைத் தூண்டி விட்டு ஐரோப்பாவினுள் அதன் செயற்பாடுகளைக் குறுக்கி அதற்கு குடியேற்ற நாடுகள் எதுவுமே இல்லாமலாக்கிய பிரிட்டனை பழிவாங்க, தாங்களே "தூய" ஆரியர்கள்; தங்களுக்கே உலகை ஆளும் தகுதி உண்டு என்று களத்தில் இறங்கி இரண்டு உலகப் போர்களைத் தொடங்கிவைத்துத் தன்னை ஏமாற்றி பிரிட்டன் பிடித்த நாடுகளை இழக்க வைத்த செருமனியும் சிறந்த நாகரீக வளர்ச்சி பெற்றிருந்த "திராவிடர்களை" (இதுவும் ஒரு கற்பனை இனம்) வென்றவர்கள் என்ற கற்பனை ஊட்டிய உளவியல் ஊக்கத்தால் பிற ஐரோப்பிய மக்களும் பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் பூசலில் பார்ப்பனரல்லாதாரின் மூதாதையினர் என்று தவறாகக் கற்பிக்கப்பட்ட"திராவிடர்களை" வென்றவர்கள் என்ற மதர்ப்பை ஊட்டுவதால் பார்ப்பனர்களும் தத்தமக்குக் கீழுள்ள சாதிகள் மீது தாம் கட்டவிழ்த்து விடும் சாதியக் கொடுமைகளுக்கு "ஆரியர்களான" பார்ப்பனர்களே காரணம் என்று திசைதிருப்ப முடிவதால் பார்ப்பனரல்லாதோரும் என்று இந்தியாவிலும் உலகெங்கிலும் அரசியல் நோக்கங்களுக்காக இந்தப் போலிக் கோட்பாடு வரலாற்றியல் – குமுகியல் அடிப்படை அணுகலில் முதலிடம் பெற்று விளங்குகிறது.

 

"ஆரிய இனம்" இல்லை என்றால் அவர்களது தாய்மொழி என்று இனங்காணப்பட்ட மறைமொழியும் சமற்கிருதமும் எவருடையவை என்ற கேள்வியும் அதனுடனேயே எழுகிறது. உண்மையில் இந்த மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர் யார் என்ற கேள்விக்கு விடையின்றி நின்ற வெற்றிடம் தான் அதை நிரப்புவதற்கென்று ஒரு போலி இனம் உருவாகக் காரணமாக இருந்தது. இன்று அதே கேள்வி விடைகேட்டு நம் முன் எழுந்து நிற்கிறது.

 

தமிழ் ஓர் இயன்மொழி என்கிறோம். தமிழ் இந்த வகைப்பாட்டினுள் வரலாம். ஆனால் அம்மொழியைக் கையாண்ட மக்களின் தலையீடு, அதாவது ஒழங்குபடுத்தல், அதாவது செயற்கைக் கூறு அதில் சிறிதும் இல்லையா? எந்தவொரு மொழிக்கும் என்று இலக்கணம் வகுக்கப்படுகிறதோ அன்றே அம்மொழியில் செயற்கைக் கூறு புகுந்து விடுகிறது.

மொழி ஒரு கருத்தறி கருவி என்கிறார்கள். கருத்தை அறிவிப்பதிலும் அரசியல் இருக்கிறது. உலக வரலாற்றில் மொழி பற்றிய ஒரு பொது நடைமுறை, பெரும்பாலான நேர்வுகளில், உண்மையான மக்களாட்சி மரபுகள் வேர்கொள்ளாத குமுகங்களில் வழிபாடும் ஆட்சியும் மக்களுக்குப் புரியாத மொழிகளில் நடைபெறுவதாகும்.

 

ஐரோப்பாவில் ஒரு கட்டத்தில் பல்வேறு நாடுகளிலும் சட்டமும் சமய நூல்களும் கிரேக்கம் மற்றும் இலத்தின் மொழிகளில் இருந்தன. காந்தியார் கூட இங்கிலாந்தில் சட்டம் படித்தபோது சட்டத்தை எளிதாகப் புரிந்து கொள்ள இலத்தீனும் கிரேக்கமும் படிக்க தனிப்பயிற்சி மேற்கொண்டதாகக் குறிப்பிடுகிறார். இந்த மொழிசார் அரசியல் குமரிக்கண்டத்திலும் இந்தியாவிலும் தமிழகத்திலும் நிகழ்ந்துள்ளது. தமிழ், மறைமொழி சமற்கிருதம் என்ற மொழிகளின் பிரிவினை, தோற்றம், மாற்றம், வளர்ச்சி, தளர்ச்சி ஆகியவற்றை இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் தான் புரியும்.

 

இயல்பாக உருவான, ஒரு விரிந்த பரப்பிலுள்ள மக்கள் பேசும் பேச்சு வழக்குகளைத் தொகுத்து முதல் இலக்கணம் வகுக்கப்பட்டிருக்க வேண்டும். அது அகத்தியம் ஆக இருக்க வேண்டும்.

மாந்தவியலின் படி முதலில் பூசாரியர் ஆட்சி இருந்தது. அது பெண் பூசாரியர் ஆட்சியாக இருந்தது. அது பின்னர் ஆண் பூசாரியர் ஆட்சியாக மாற்றம் கண்டது.

 

உண்மையான ஏழு மாதர் பட்டியல் கிடைக்கவில்லை சிலப்பதிகாரம் "வழக்குரை காதை"யில் அச்சம் தரும் தோற்றம் கொண்டிருந்த கண்ணகிக்கு "அறுவர்க்கிளைய நங்கை"யை உவமையாக பாண்டியன் நெடுஞ்செழியனிடம் வாயிலோன் கூறுகிறான். இதற்கு "ஏழு மாதரில் இளையவளான பிடாரி" என்று பொருள் கூறப்பட்டுள்ளது.

 

பிடாரி என்ற சொல்லுக்குக் காளி என்று அகரமுதலிகள் பொருள் தருகின்றன. உண்மையில் அவள் நாகர்களின் முதல் தாய். பிடாரன் – பிடாரி. சிலப்பதிகாரமும் அவளை "துளை யெயிற்றுரகக் கச்சுடை முலைச்சி" (துளை கொண்ட பற்களை உடைய நச்சுப் பாம்பை முலைக்கச்சாய் அணிந்தவள்) என்றே "வேட்டுவ வரி"யில் கூறுகிறது.

 

குமரிக் கண்ட மக்கள் எனும் போது உலக மக்கள் அனைவருமே இந்த 7 பெண்களின் வழி வந்தவர்களே. தமிழகத்திலுள்ள பெரும்பாலான சாதி வரலாறுகள் தாங்கள் 7 மாதர்கள் (கன்னியர், தாயர்) வழி வந்தவர்கள் என்று கூறுகின்றன. சில சாதியினர் அல்லது சாதி உட்பிரிவினர் தாங்கள் பார்ப்பனியம் எனும் வெள்ளாளக்கட்டை மேற்கொண்டதின் அடையாளமாக ஏதோவொரு முனிவர் வழிவந்தோராகக் கூறுகின்றனர். மனித இனமே 5 முதல் 10 பெண்களின் வழி வந்தது என்று இன்றைய அறிவியல் கூறுகிறது. குமரிக் கண்டத்திலிருந்து முழுகியதாக இறையனார் அகப்பொருளுரையில் நக்கீரர் பட்டியலிட்டுள்ள நாடுகளும் ஏழேழாக உள்ளமை இன்னோர் சான்று. இவ்வாறு ஒரு மூதாதையரின் வழி வந்த மக்கள் தொகுதியைக் குக்குலம் (Tribe) என்கிறோம். மூலக்குடிகள் தொல்குடியினர் ஆதிவாசிகள் என்ற சொற்களும் பயனில் உள்ளன. ஆனால் இன்று அந்த 7 மாதர்களில் எந்தவொரு தனிமாதரின் நேரடி வழிவந்தவர்களென்று எவராவது உள்ளனரா என்ற அறிவது கடினம்.

 

ஓரணுவுயிரியாகிய அமீபா தொடங்கி உடலளவில் மனிதனாக திரிவாக்கம் பெற்றதற்கு இணையாக குமுக அமைப்பு, செய்தித் தொடர்பு முதலியனவும் முழுமை நோக்கி நடைபோட்டன. செய்தி தொடர்பு வளர்ச்சி தான் மொழி. இந்த வளர்ச்சி நிலைகளில் ஒன்று, ஏழு பெண்களின் வழியினராக தனித்தனி கட்டமைப்புகளோடு மலை முகடு முதல் கடற்கரை மணல் மேடுகள் வரை வாழ்ந்த ஒவ்வொரு குக்குல மக்களுக்கிடையிலும் நிலத்தின் வேறுபாட்டால் ஏற்பட்ட நில எல்லைகள் அடிப்படையிலான வேறுபாடுகள். இந்த வேறுபாடுகள் ஒவ்வொரு நில எல்லைக்கும் உட்பட்ட மக்களிடையிலுள்ள குக்குல வேறுபாடுகளை புறந்தள்ளி அந்தந்த மண்ணின் மைந்தர்களாகத் தொகுத்தன. இந்தப் பணியை அந்தந்த நிலத்துக்குரிய ஏழு குக்குல பூசாரியார் இணைந்து செய்தனர் என்பதற்குத் தடயங்கள் உள்ளன.

Read more...

கார்த்திக் 24 உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறது.

About This Blog

நம் தளம் பற்றிய கருத்துகள் மற்றும் உங்கள் கதைகள் நம் தலத்தில் ஒலிபரப்பு செய்ய: kaarthik2008.vaalu24@blogger.com என்ற முகவரியில் பதிவு செய்யுங்கள், நன்றி...

adsforindians

Guru

நண்பர்கள் தளம்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP