ஸ்ரீகாளஹஸ்தி கோவிலின் மேலும் 4 கோபுரங்களும் இடிந்து விழும் அபாயம்

Monday, May 31, 2010

ஸ்ரீகாளஹஸ்தி கோவிலின் மேலும் 4 கோபுரங்களும் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக தெரியவந்து உள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி நகரில் பிரசித்தி பெற்ற ஞானபிரசுனாம்பிகை உடனுறை ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. 500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோவிலின் ராஜகோபுரம், கடந்த 26-ந் தேதி அடியோடு இடிந்து விழுந்தது.

காளஹஸ்தி கோவிலுக்கு 4 நுழைவு கோபுரங்கள் உள்ளன. தற்போது இந்த 4 கோபுரங்களும் இடிந்து விழும் நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இடிந்து விழுந்த ராஜகோபுரத்திற்கு 50 அடி தூரத்தில் பிட்சால ராஜகோபுரம் உள்ளது.

இந்த கோபுரத்தை 11-ம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழன் கட்டியதாக தல வரலாறு கூறுகிறது. இந்த கோபுரத்தைச் சுற்றி ஆலமரச் செடிகள் மற்றும் முள் செடிகள் சேர்ந்து புதர்களாக வளர்ந்துள்ளது. இதனால் கோபுரத்தின் அடித்தளத்தில் விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது.

மேலும் காளஹஸ்தீஸ்வரர் மற்றும் ஞானபிரசுனாம்பிகா தாயார் கோவில் கருவறைகள் மீது கட்டப்பட்டுள்ள விமான கோபுரங்களும் சிதிலம் அடைந்துள்ளது. இந்த கோபுரங்களில் வடிவமைக்கப்பட்டுள்ள சிற்பங்களில் இருந்து மண் உதிர்ந்து வருகிறது. இதனால் சிற்பங்களின் கண்கள், மூக்கு, வாய், கைகள் சிதிலமடைந்து கோரமாக காட்சி அளிக்கின்றன.

இதேபோன்று 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பால ஞானாம்பிகா கோபுரத்தில் இருந்தும் மண் உதிர்கிறது. இந்தக் கோபுரமும் முழுவதும் சேதமடைவதற்குள் மராமத்து பணிகள் மேற்கொண்டு எஞ்சிய கோபுரங்களையாவது காக்க வேண்டும் என்று காளஹஸ்தி நகர மக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீகாளஹஸ்தி ராஜ கோபுரம் கடந்த 26-ந் தேதி இடிந்து விழுந்தது. இதனால் காளஹஸ்தி நகரமே களை இழந்து காணப்படுவதாக அந்தப் பகுதி பொது மக்கள் வருத்தம் தெரிவித்து உள்ளனர்.

இனி அந்த கோபுரத்தை தரிசிக்க முடியாது என்பதால், காளஹஸ்தி நகரின் சுற்றுப்புறங்களில் வசிப்பவர்கள் இடிந்த கோபுரத்தின் கற்களையும் மண்ணையும் எடுத்துச் செல்கின்றனர். அவற்றை தங்கள் வீடுகளில் பூஜை அறையில் வைத்து கும்பிட இருப்பதாக பெண்கள் தெரிவித்தனர்.

இடிந்து விழுந்துவிட்ட கோபுரத்தை பார்வையிட்ட மாநில அறநிலையத்துறை ஆணையர் ஜே.வி.எஸ். பிரசாத் ஓராண்டுக்குள் மீண்டும் அதே போன்ற ராஜ கோபுரத்தை கட்டி முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

கடந்த 25 ஆண்டுகளாகவே ஸ்ரீகாளஹஸ்தி கோவிலின் ராஜகோபுரம் சிதிலமடைந்து விரிசல் ஏற்பட்டு இருந்துள்ளது. அதனை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்காமல் உதாசீனப்படுத்தியதால்தான், இந்த நிலைமை ஏற்பட்டது. இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நீதி விசாரணைக்கு உத்தரவிட்டு, இது போன்ற சம்பவங்கள் மேலும் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்று பிரஜா ராஜ்ஜியம் கட்சித் தலைவர் நடிகர் சிரஞ்சீவி தெரிவித்து உள்ளார்.

0 comments:

Post a Comment

கார்த்திக் 24 உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறது.

About This Blog

நம் தளம் பற்றிய கருத்துகள் மற்றும் உங்கள் கதைகள் நம் தலத்தில் ஒலிபரப்பு செய்ய: kaarthik2008.vaalu24@blogger.com என்ற முகவரியில் பதிவு செய்யுங்கள், நன்றி...

adsforindians

Guru

நண்பர்கள் தளம்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP